லஞ்ச ஒழிப்புத்துறை புதிய டிஜிபியாக சந்தீப் மிட்டல் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நிலையில், ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.
ஏற்கனவே பல்வேறு மாவட்ட ஆட்சியர்கள், காவல் ஆணையர்கள் உள்ளிட்டோர் மாற்றம் செய்யப்பட்ட நிலையில் இன்று தலைமை செயலாளர் முருகானந்தம் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக சாய்குமார் ஐஏஎஸ் தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதுபோன்று தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக செயல்பட்டு வரும் டேவிட்சன் தேவாசீர்வாதம் ஐபிஎஸ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக சந்தீப் மிட்டல் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி தான் டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆயுதப்படையில் இருந்து லஞ்ச ஒழிப்புத் துறைக்கு மாற்றப்பட்டார்.
அதன்படி, 39 நாட்களில் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய டிஜிபியை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
இதுகுறித்து தேர்தல் ஆணைய செயலாளர் லதா திரிபாதி தமிழக தலைமை செயலாளருக்கு அனுப்பிய கடிதத்தில், “இந்த உத்தரவுகள் உடனடி அமலுக்கு வர வேண்டும். மேலே குறிப்பிட்ட அதிகாரி பணியில் இணைந்தது குறித்த பணி ஏற்பு அறிக்கையை 08.04.2026 அன்று மாலை 6:00 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
தற்போது பணியிட மாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள், இந்தத் தேர்தல் முடியும் வரை தேர்தல் தொடர்பான எந்தப் பணிகளிலும் அமர்த்தப்படக் கூடாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலோர பாதுகாப்பு குழு ஏடிஜிபியாக இருந்த சந்தீப் மிட்டல் கடந்த 2024 ஜூலை மாதம் சைபர் கிரைம் ஏடிஜிபியாகவும்,
கடந்த 2025 டிசம்பர் 30ஆம் தேதி சைபர் கிரைம் கூடுதல் டிஜிபி பொறுப்பிலிருந்து சைபர் கிரைம் டிஜிபியாகவும் பதவி உயர்வு பெற்றார்.
இவர் 1995 பேட்ச் தமிழக கேடர் ஐபிஎஸ் அதிகாரி. சைபர் செக்யூரிட்டியில் ஸ்பெஷலிஸ்ட் என பெயர் பெற்றவர்.
கடந்த அதிமுக ஆட்சியின் போது டெல்லி பணியில் இருந்து தமிழக கேடருக்கு திரும்பினார். அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தலின் பேரில் இவர் தமிழக கேடருக்கு வந்தார் என அப்போது பரபரப்பாக பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
