சங்கி கூட்டணியில் சேர்ந்த காரணத்தால், அவர்களைப் போலவே வாட்ஸ்அப் வதந்திகளை வாந்தி எடுத்துக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி என முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
விருதுநகரில் இன்று (ஏப்ரல் 5) நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். கூட்டத்தில் பேசிய முதல்வர் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களான கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கடற்கரை ராஜ், தங்கபாண்டியன், விஜயபிரபாகரன், அசோகன், மகாலிங்கம், ஆகியோருக்கு வாக்கு சேகரித்து பேசினார்.
மேலும் அரசின் நலத்திட்டங்களை பட்டியலிட்டு பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்தார். “சாதனைகள் எதையும் சொல்ல முடியாமல், அவதூறுகளையும் தரம் தாழ்ந்த பேச்சுகளையும் நம்பி பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. பழனிசாமி என்றால் அது பொய் பித்தன் என்றுதான் அர்த்தம். பழனிசாமி சொல்லியிருக்கும் பொய்களை ஒரு புத்தகமே போடலாம். அந்த அளவுக்கு பொய்களைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
5 முறை முதலமைச்சராக இருந்த தலைவர் கலைஞரைப் பற்றி பச்சைப் பொய்யைப் பேசும் பழனிசாமிக்கு நான் நெல்லையில் பதிலடி கொடுத்திருக்கிறேன். தான் சொன்ன ஒரு பொய்யிலிருந்து தப்பிக்க, அடுத்தடுத்த பொய்களை கூச்சமே இல்லாமல் சொல்லத் தொடங்கியிருக்கிறார்.
இதெல்லாம் வரலாறு
பெருந்தலைவர் காமராஜருக்கு நாம் இடம் தர மறுத்தோமாம். அதேபோல் அம்மையார் ஜானகி எம்.ஜி.ஆர் அவர்களுக்கு இடம் தர மறுத்தோம் என்று உளறிக் கொட்டியிருக்கிறார். சங்கி கூட்டணியில் சேர்ந்த காரணத்தால், அவர்களைப் போலவே வாட்ஸ்அப் வதந்திகளை வாந்தி எடுத்துக் கொண்டிருக்கிறார்.
பெருந்தலைவர் காமராஜர் மறைந்தபோது, சொந்த மகனைப்போல உடன் இருந்து இறுதி நிகழ்வுகளைச் செய்தவர் நம்முடைய தலைவர் கலைஞர். காமராஜரின் திருவுடலை தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கலாம் என்று சொன்னபோது, அவர் ஒரு கட்சிக்கு மட்டும் தலைவர் அல்ல, எல்லோருக்குமான தலைவர் என்பதால் முன்னாள் முதலமைச்சர் என்ற காரணத்தால் ராஜாஜி மண்டபத்தில் தான் வைக்க வேண்டும் என்று சொன்னவர் கலைஞர். அவரை கிண்டி காந்தி மண்டபத்தில் தகனம் செய்ய முடிவெடுத்து, நள்ளிரவு மழையில் நனைந்தபடி இடத்தைத் தேர்வு செய்தார்கள்.
முப்படை வீரர்கள் தூக்கி வந்த பெருந்தலைவர் காமராஜரின் உடலை வாங்கி பீரங்கி வண்டியில் வைத்தது தலைவர் கலைஞரும் அன்றைய கர்நாடக முதல்வர் தேவராஜ் அரசு ஆகியோர்தான். தகன மேடைக்கு அருகே இந்திரா காந்தி அம்மையாருடன் கலைஞரும் இருந்தார். இதெல்லாம் வரலாறு. பழனிசாமி சொன்ன பொய் உண்மை என்றால் அந்தக் காலத்திலேயே இந்தப் பிரச்சினை சர்ச்சையாகி இருக்கும் அல்லவா? பத்திரிகைகளில் செய்தியாக வந்திருக்கும். ஆனால் அப்படி எதுவும் நடைபெறவில்லை.
தமிழ்நாட்டு காங்கிரஸ் தலைவர்கள் எழுதிய புத்தகங்களிலேயே கலைஞரைப் பற்றி புகழ்ந்துதான் இந்த விஷயம் குறித்து
எழுதியிருக்கிறார்கள்.
கோட்டையில் ஜானகி எம்.ஜி.ஆர்
அதேபோல், ஜானகி எம்.ஜி.ஆர் மறைந்த சில நாட்களிலேயே ராமாவரம் தோட்டத்தில் இருக்கும் எம்.ஜி.ஆர் இல்லத்தில் ஜானகி எம்.ஜி.ஆர் படத்தைத் திறந்து வைத்தவர் கலைஞர். ஆர்.எம். வீரப்பன், ராமசாமி உடையார், வழக்கறிஞர் என்.சி. ராகவாச்சாரியார் ஆகியோர் உடன் இருந்த நிகழ்வு அது.
சில காலம் மட்டுமே முதலமைச்சராக இருந்த ஜானகி எம்.ஜி.ஆர் அவர்களின் படத்தை அதிமுக தலைவர்கள் கோட்டையில் மாட்டவில்லை. கலைஞர் 1996-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிறகுதான் கோட்டையில் அவர்களின் படத்தை மாட்டச் செய்தார். அந்த அளவுக்கு மதித்தார்.
மனிதனுக்கு இலக்கணம்.
ஆனால், முந்தாநாள் அடித்த காற்றில் முதலமைச்சராகி மக்களால் தூக்கி எறியப்பட்ட பழனிசாமிக்கு இதெல்லாம் தெரியுமா? தப்பு செய்தால் வருத்தம் தெரிவிப்பதுதான் நல்ல மனிதனுக்கு இலக்கணம். அதை விட்டுவிட்டு மேலும் மேலும் பொய்களைச் சொன்னால் பழனிசாமி இன்னும் அசிங்கப்பட்டுப் போவார்” என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காட்டமாக தெரிவித்தார்.
