எம்.கே. வேணு
இந்தியா-அமெரிக்கா இடையிலான இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் ஒரு சீட்டுக்கட்டு மாளிகையைப் போல இருப்பது தெளிவாகத் தெரிகிறது. டிரம்பின் வாக்குறுதிகளை மட்டும் நம்பி இந்தியா நீண்டகாலத் தொழில் கொள்கையை வகுக்க முடியாது.
ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியாவின் நிலைப்பாடு, தற்போதைய சூழலில் யாராலும் பேசப்படாத ஒரு பெரும் பிரச்சனையாக உள்ளது. இந்தியா ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்கினால் அமெரிக்கா மீண்டும் 25% அபராத வரியைச் சுமத்தக்கூடும் என்று அமெரிக்க அதிபர் நிர்வாக உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இது குறித்துக் கேட்டபோது, தனக்கு அது பற்றித் தெரியாது என்று வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் மழுப்பினார்.
தெளிவில்லாத பதில்கள்

கோயல் ஒரு சாத்தியமற்ற செயலைச் செய்ய முயன்றார். ரஷ்ய எண்ணெய் இறக்குமதி பற்றி வெளியுறவு அமைச்சகத்திற்குத்தான் தெரியும் என்றும், அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தையில் இப்பிரச்சினை எழவில்லை என்றும் கூறி, அந்தப் பெரும் பிரச்சினையைத் தவிர்க்கப் பார்த்தார்.
ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி குறித்து இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்று கேட்டபோது, வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரியும் தெளிவற்ற பதிலையே அளித்தார். இந்தியா சுதந்திரமான எரிசக்திக் கொள்கையைக் கொண்டிருக்குமா என்ற கேள்விக்கு, “தேசிய நலன் கருதி, நிலைத்தன்மையை உறுதிப்படுத்தப் பல்வேறு இடங்களிலிருந்து எரிசக்தி ஆதாரங்களை இந்தியா பெற்றுவரும்” என்று மிஸ்ரி கூறினார். சமீபத்திய ஆண்டுகளில் இந்தியாவின் மொத்த எண்ணெய் இறக்குமதியில் 37 சதவீதமாக இருந்த ரஷ்யாவின் பங்கு, பூஜ்ஜியமாகக் குறைக்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளிக்கவில்லை.
பியூஷ் கோயலும் விக்ரம் மிஸ்ரியும் ரஷ்ய எண்ணெய் இறக்குமதி குறித்துத் தெளிவான விளக்கத்தை அளிக்கவில்லை. மோடி அரசாங்கம் ‘அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பு’ என்ற தத்துவத்தைப் பரிகாசம் செய்வதாக முன்னாள் நிதிச் செயலாளர் சுபாஷ் கார்க் ‘தி வயர்’ (The Wire) தளத்திடம் தெரிவித்தார். ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்கினால் 25% அபராதம் வரி விதிக்கப்படும் என்ற டிரம்பின் உத்தரவுக்கு அரசாங்கத்தில் யாரும் தெளிவாகப் பதிலளிக்கவில்லை. நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் கடினமான கேள்விகளை எதிர்கொள்ளாமல் தப்பித்துக்கொள்வதைப் பிரதமர் நரேந்திர மோடி ஒரு வழக்கமாகவே கொண்டுள்ளார்.
இந்தியாவின் தன்னாட்சி பெற்ற எரிசக்திக் கொள்கையைக் கட்டுப்படுத்தும் டிரம்பின் நிர்வாக உத்தரவு பிரதமர் மோடிக்கு அதிர்ச்சியாகவே இருந்திருக்கும் என்பது தெளிவாகத் தெரிகிறது. இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் குறித்த இந்தியா-அமெரிக்க கூட்டு அறிக்கை வெளியான உடனேயே இப்படி ஒரு உத்தரவு வரும் என்று தெரிந்திருந்தால், மோடி தனது “நண்பர்” டிரம்புடன் அடைந்த முன்னேற்றம் குறித்து ‘எக்ஸ்’ (X) தளத்தில் மிகுந்த உற்சாகத்துடன் பதிவிட்டிருக்க மாட்டார்.

மோடியிடமும் அமைச்சரவை உறுப்பினர்களிடமும் உள்ள பிரச்சினை என்னவென்றால், டிரம்ப் அளித்த வாக்குறுதிகளை அவை நிறைவேறும் முன்பே கொண்டாடுவதுதான். மற்ற நாடுகளை விட இந்தியா சிறந்த ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளதாக வர்த்தக அமைச்சர் உரிமை கோரினார். ஆனால், அதன்பிறகு வங்கதேசத்திடமிருந்து பருத்தி நூல் மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட இழைகளை அமெரிக்கா இறக்குமதி செய்தால், வங்கதேசத்தின் ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை ஏற்றுமதிக்கு அமெரிக்கா பூஜ்ஜிய வரி சலுகையை வழங்குவதாக டிரம்ப் அறிவித்தார்.
டிரம்ப் மிகவும் தந்திரமாக வங்கதேசத்தின் விநியோகச் சங்கிலியில் அமெரிக்காவை இணைத்துள்ளார். இப்போது, ஏற்கனவே இந்திய ஜவுளித் துறையை விட சர்வதேச அளவில் அதிகப் போட்டித் திறனைக் கொண்டுள்ள வங்கதேசம், அமெரிக்கச் சந்தையில் இந்தியாவை விட 18% கூடுதல் நன்மையைப் பெறும்.
டிரம்புடன் நடத்தும் அனைத்துப் பேச்சுவார்த்தைகளிலும் ஸ்திரமற்ற தன்மை இருக்கும் என்பதை உணர்ந்து, எப்போதும் மாற்றுத் திட்டங்களையும் தீர்வுகளையும் வைத்திருக்க வேண்டும் என்பதே இந்தக் கதை சொல்லும் பாடம்.
இந்தியா-அமெரிக்க இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் சீட்டுக்கட்டு மாளிகையைப் போன்றது. டிரம்பின் வாக்குறுதிகளின் அடிப்படையில் இந்தியா நீண்டகாலத் தொழில் கொள்கையை வகுக்க முடியாது. அமெரிக்காவில் வேலை தேடும் இந்தியர்களுக்கான ‘H1B’ விசா முறையில்கூட எந்த உறுதியான உத்தரவாதத்தையும் வர்த்தக அமைச்சரால் பெற முடியவில்லை. விசா பிரச்சனை குறித்து இந்தியா பேசியதா என்று கேட்டதற்கு, ‘H1B’ அதன் முக்கியத்துவத்தை இழந்துவிட்டது என்று அவர் கூறினார்! நிலையான விசா முறை தேவை என்பது அனைத்து வர்த்தகப் பேச்சுவார்த்தைகளிலும் இந்தியாவின் மிகப்பெரிய கோரிக்கையாக இதுவரை இருந்துவந்துள்ளது. இப்போது அது பெரிய விஷயமல்ல என்று சொல்லப்படுகிறது.

எரிசக்தி, விமானங்கள், விவசாயம் போன்ற துறைகளில் 500 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை வாங்கும் இந்தியாவின் முடிவை பியூஷ் கோயல் நியாயப்படுத்த முயன்றார். இந்தியாவும் அமெரிக்காவும் செயற்கை நுண்ணறிவுத் துறையிலும் உயர் தொழில்நுட்பத்திலும் இயற்கையான பங்காளிகள் என்றும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் 1.3 டிரில்லியன் டாலர் மதிப்பிலான தகவல் தொடர்பு தொழில்நுட்ப (ICT) கொள்முதலுக்கான வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறினார். ஆனால், அனைத்துத் தொழில்நுட்ப இறக்குமதிகளையும் ஒரே இடத்திலிருந்து பெறுவோம் என்று இந்தியா எப்படி உறுதி அளிக்க முடியும்? மூலோபாயத் தன்னாட்சி (Strategic autonomy) என்பது பல்வேறு தொழில்நுட்ப ஆதாரங்களுடன் இணைந்திருப்பதாகும். AI என்பது மிகவும் ஆற்றல்மிக்க துறை. இதில் ஐரோப்பிய யூனியன், ஜப்பான், சீனா போன்ற நாடுகளுடன் இந்தியா வணிகம் செய்ய வேண்டியிருக்கும்.
அவசரம் வேண்டாம்
எதிர்காலத்தில் தனது அதிர்ஷ்டத்தை ஒரே ஒரு நாட்டை மட்டும் நம்பி ஒப்படைப்பது என்பது அடிப்படையிலேயே தவறான ஒரு கருத்தாகும்.
மேலும், எதன் அடிப்படையில் அமெரிக்காவிலிருந்து 1.3 டிரில்லியன் டாலர் மதிப்பிலான தொழில்நுட்பப் பொருட்களை இந்தியா வாங்கும் என்று பியூஷ் கோயல் உறுதியளிக்கிறார்? இந்த இறக்குமதிகளில் பெரும்பாலானவற்றைத் தனியார் துறைதான் மேற்கொள்ள வேண்டும். இந்நிலையில் தனியார் துறையின் சார்பில் அரசாங்கம் எப்படி இத்தகைய கொள்முதல் உறுதிமொழிகளை அளிக்க முடியும்?
எதிர்காலத்தில் சீனா, ஜப்பான் அல்லது ஐரோப்பிய யூனியனிடமிருந்து தொழில்நுட்ப இறக்குமதிகளைச் செய்வது லாபகரமானது என்று தனியார் துறை நினைக்கக்கூடும். அமெரிக்காவை விட ஐந்து மடங்கு குறைவான செலவில் சீனாவில் AI மாடல்கள் உருவாக்கப்படுகின்றன என்பது ஏற்கனவே தெளிவாகிவிட்டது. ரஷ்யாவின் ஐந்தாம் தலைமுறைப் போர் விமானங்கள் அமெரிக்காவின் உபகரணங்களை விடப் பாதி விலையில் கிடைக்கின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக, 140 கோடி மக்களின் தரவுகளை டிரம்ப் போன்றவர்களின் அழுத்தங்களுக்கு அடிபணியாமல் இந்தியா மிகவும் கவனமாகப் பயன்படுத்த வேண்டும்.

ராகுல் காந்தி தனது மக்களவை உரையில் குறிப்பிட்டது போல, இந்தியாவின் வளர்ந்து வரும் நுகர்வோர் சந்தை தொடர்பான தரவுகள் மிகவும் மதிப்புமிக்கவை; அதைப் பெறுவதற்காக உலகம் எதையும் செய்யும். அப்படியிருக்கையில், அமெரிக்காவிற்கு மட்டும் ஏன் பிரத்யேக உறுதிமொழி அளிக்க வேண்டும்? பொதுவாக, அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளுக்கான தொழில்நுட்பத் துறையில் இத்தகைய அதிரடியான உறுதிமொழிகளை அளிப்பது அபத்தமானது; அறிவுக்குப் புறம்பானது.
இந்த இடைக்கால ஒப்பந்தம் அதைத்தான் செய்ய முயல்கிறது. இந்த இடைக்கால ஒப்பந்தத்தை ஆழமாக மறுபரிசீலனை செய்ய இன்னும் காலம் கடந்துவிடவில்லை.
இறுதியாகப் பிரதமர் மோடிக்கு ஒரு வேண்டுகோள். அவசரப்பட்டு எதையும் கொண்டாட வேண்டாம்!
எம்.கே. வேணு, கட்டுரையாசிரியர், மூத்த ஊடகவியலாளர்.
