நடிகர் விஜய்க்கு நயினார் கூறிய அறிவுரையை திமுக, தவெக திசை திருப்புவது ஏன் என்று பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் கேள்வி எழுப்பியுள்ளார்.
நடிகர் விஜய் வீட்டிலிருந்தும், திரிஷாவிடமிருந்தும் வெளியே வர வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியிருந்தார்.
இந்நிலையில் ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடுவதா என விஜய்க்கு ஆதரவாக திமுக பெண் எம்.பி.க்கள் குரல் கொடுத்தனர். அதுபோன்று தவெகவினர், நயினாரெல்லாம் ஒரு ஆளா என்று கடுமையாக விமர்சித்திருந்தனர்.
இதற்கு பதிலளித்து இன்று (பிப்ரவரி 14) அறிக்கை வெளியிட்டுள்ள பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத், “எம்ஜிஆர் ஆரம்பித்த அதிமுக-வை இபிஎஸ் வைத்துள்ளார், அண்ணா ஆரம்பித்த திமுக-வை ஸ்டாலின் வைத்துள்ளார். என்னைப்போல தனித்து கட்சி ஆரம்பிக்க முடியுமா?” என தற்பெருமையுடன் விஜய் பேசியுள்ளார்.
ஆனால், யதார்த்தத்தில் திமுகவிடம் கொள்கைகளையும் தொண்டர்களையும் அடமானம் வைத்துவிட்டு, மக்களைச் சந்திக்காமல், மக்கள் பிரச்சினைகளைப் பேசாமல், வெறும் ‘கிணற்றுத் தவளையாக’ அறிக்கை அரசியலை மட்டும் விஜய் செய்து வருகிறார். எழுதித் தருவதைப் படித்துவிட்டு அரசியல் வசனம் பேசுவது, அதிமுக – பாஜக கூட்டணியை வீழ்த்தி திமுகவை மீண்டும் அரியணையில் ஏற்றும் ஒரு கண்துடைப்பு நாடகமே தவிர வேறில்லை.
பாஜக மூத்த தலைவர் நயினார் நாகேந்திரன், விஜய்யின் அரசியல் முதிர்ச்சியின்மையை சுட்டிக்காட்டி ஒரு மூத்த சகோதரனாக சில ஆலோசனைகளை வழங்கினார். முதலில் விஜய் தனது வீட்டை விட்டு வெளியே வந்து மக்களை சந்திக்க வேண்டும். குடும்பத்தோடு சுமுகமான உறவைப் பேண வேண்டும். தேவையற்ற சர்ச்சைகளில் சிக்காமல், தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிடாமல், ஒரு குறிப்பிட்ட நடிகையுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாவதை அவர் தவிர்க்க வேண்டும்.
இது எவ்வித உள்நோக்கமும் இன்றி, ஒரு பொதுவாழ்வில் இருப்பவர் எப்படி இருக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் சொல்லப்பட்ட கருத்து. ஆனால், இதைத் திசைதிருப்ப திமுகவும், தவெகவும் கைகோர்த்துச் செயல்படுவது அவர்களின் ரகசிய உறவையே காட்டுகிறது.
சட்டப்பேரவையிலேயே மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சேலையைப் பிடித்து இழுத்த கலாச்சாரத்தைக் கொண்ட திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர், பெண்களுக்குப் பெருமை சேர்க்கும் பாஜக-வுக்கு பாடம் எடுக்கத் தேவையில்லை.
தமிழக அரசியலில் ‘பிணந்தின்னி அரசியலை’ அறிமுகப்படுத்தியதே திமுகதான். இப்போது தவெக தலைவர் விஜய்யும் அதே பாதையில் பயணிக்கிறார். கட்சிக்காக உயிர்நீத்த 41 தொண்டர்களின் பிணத்தின் மீது நின்று அரசியல் செய்வது கண்டிக்கத்தக்கது.
தமிழக வெற்றிக் கழகம் என்பது தற்போது ஒரு ‘வியாபாரக் கழகமாக’ மாற்றப்பட்டுள்ளது. விஜய் ஏன் திமுகவின் வெற்றிக்காகப் பாடுபடுகிறார்? இதற்கான அனைத்து ஆதாரங்களையும் விரைவில் பாஜக வெளியிடும்” என்று தெரிவித்துள்ளார்.
