இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் தங்கள் பொருளாதார மற்றும் நிதிசார் கூட்டாண்மையை (Economic Relations) மேலும் வலுப்படுத்துவதை நோக்கிய ஒரு முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளன. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் பிரான்சின் பொருளாதாரம், நிதி மற்றும் தொழில்துறை அமைச்சர் ரோலண்ட் லெஸ்கியூர் ஆகியோர், வெள்ளிக்கிழமையன்று பிரான்சின் எக்ஸ்-என்-புரோவென்ஸ் (Aix-en-Provence) நகரில் நடைபெற்ற ‘இந்தியா-பிரான்ஸ் பொருளாதார மற்றும் நிதிசார் கலந்துரையாடல்’ கூட்டத்திற்கு கூட்டாகத் தலைமை தாங்கினர்.
இந்தியா-பிரான்ஸ் பொருளாதார கூட்டம்:
இக்கூட்டத்தின்போது, முதலீடு, வர்த்தகம், தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிப்பது தொடர்பான பல முக்கிய விவகாரங்கள் குறித்து இரு நாடுகளும் விரிவாக விவாதித்தன. பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் பிப்ரவரி மாதம் இந்தியாவுக்கு வருகை தந்திருந்தபோது, பிரதமர் நரேந்திர மோடிக்கும் அதிபர் மேக்ரானுக்கும் இடையே எட்டப்பட்ட புரிதலின் அடிப்படையிலேயே இந்தக் கூட்டம் நடைபெற்றது. அந்த வருகையின்போது 2026-ஆம் ஆண்டில் ‘இந்தியா-பிரான்ஸ் பொருளாதார மற்றும் நிதிசார் கலந்துரையாடல்’ கூட்டத்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டிருந்தது.
விவாதிக்கப்பட்ட விவகாரங்கள்:
இக்கூட்டத்தில், ஜி20 (G20) மற்றும் பாரிஸ் கிளப் (Paris Club) போன்ற உலகளாவிய பொருளாதார மன்றங்களில் ஒருங்கிணைப்பை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை இரு நாடுகளும் வலியுறுத்தின. மேலும், உலகப் பொருளாதாரத்தின் தற்போதைய நிலை மற்றும் அதன் எதிர்கால வாய்ப்புகள் குறித்தும் அவை விவாதித்தன.
முதலீடுகளை அதிகரிக்க ஒப்பந்தம்:
முக்கியமான கனிமங்கள் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்த இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன. மேலும், பொருளாதாரப் பாதுகாப்பு மற்றும் பொருளாதார இறையாண்மை தொடர்பான விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டன. பரஸ்பரம் முதலீடுகளை அதிகரித்தல், நிறுவனங்களுக்கு இடையிலான முதலீட்டுப் பரிமாற்றத்தை ஊக்குவித்தல் மற்றும் அதிவேக ரயில் போக்குவரத்துத் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்துதல் ஆகியவை குறித்தும் இரு தரப்பினரும் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.
