வீட்டில் எலி நடமாட்டம் இருக்கா? உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் ‘ஹான்டா வைரஸ்’ – அறிகுறிகளை கண்டறிவது எப்படி?

Published On:

| By Santhosh Raj Saravanan

hantavirus symptoms rodent infection diagnosis safety

சமீபகாலமாகப் பல்வேறு புதிய வைரஸ் தொற்றுகள் உலகை அச்சுறுத்தி வரும் நிலையில், எலிகள் மற்றும் சுண்டெலிகள் மூலம் பரவக்கூடிய ‘ஹான்டா வைரஸ்’ (Hantavirus) குறித்த விழிப்புணர்வு மிகவும் அவசியமாகிறது. இது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவுவது அரிது என்றாலும், பாதிக்கப்பட்ட எலிகளின் சிறுநீர், எச்சில் அல்லது மலம் கலந்த காற்றைச் சுவாசிக்கும்போது மனிதர்களுக்குப் பரவுகிறது. ஆரம்பத்தில் சாதாரணக் காய்ச்சல் போலத் தெரிந்தாலும், சில நாட்களிலேயே இது நுரையீரலைப் பாதித்து உயிருக்கே ஆபத்தாக முடியும் என்பதால், இதன் அறிகுறிகளைத் துல்லியமாகத் தெரிந்து கொள்வது ஒவ்வொரு குடும்பத்திற்கும் அவசியம். குறிப்பாகத் தோட்டங்கள், பழைய சேமிப்புக் கிடங்குகள் மற்றும் எலி நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

ADVERTISEMENT

ஆரம்பக்கட்ட அறிகுறிகள்: இது சாதாரணக் காய்ச்சலா?

ஹான்டா வைரஸ் உடலுக்குள் நுழைந்த பிறகு, அதன் அறிகுறிகள் வெளிப்பட ஒன்று முதல் எட்டு வாரங்கள் வரை ஆகலாம். இதன் ஆரம்பக்கட்ட அறிகுறிகள் அப்படியே சாதாரண ‘புளூ’ காய்ச்சலைப் போலவே இருக்கும். காய்ச்சல், அதீத சோர்வு மற்றும் தசை வலி ஆகியவை பிரதானமாக இருக்கும். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்தத் தசை வலி குறிப்பாகத் தொடைகள், இடுப்பு, முதுகு மற்றும் தோள்பட்டை போன்ற பெரிய தசைப் பகுதிகளில் அதிகமாகத் தெரியும். இதனுடன் தலைவலி, தலைச்சுற்றல், குளிர் காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற வயிற்று உபாதைகளும் ஏற்படலாம். பலரும் இதைச் சாதாரணக் காய்ச்சல் என்று நினைத்து அலட்சியப்படுத்துவதுதான் உயிர் இழப்புகளுக்கு முக்கியக் காரணமாகிறது.

இரண்டாம் கட்ட ஆபத்து: நுரையீரலைத் தாக்கும் விதம்

வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட 4 முதல் 10 நாட்களுக்குப் பிறகு, நோயின் இரண்டாம் கட்ட அறிகுறிகள் தொடங்குகின்றன. இதனை மருத்துவ உலகில் ‘ஹான்டா வைரஸ் பல்மோனரி சிண்ட்ரோம்’ (HPS) என்று அழைப்பார்கள். இந்த நிலையில் நுரையீரலுக்குள் நீர் கோர்க்கத் தொடங்கும். இதனால் கடுமையான இருமல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்படும். நோயாளிக்கு மூச்சு விடுவதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டு, நெஞ்சுப் பகுதியில் யாரோ ஒரு பெரிய கல்லை வைத்து அழுத்துவது போன்ற உணர்வு உண்டாகும். இது இதயத் துடிப்பை வேகப்படுத்துவதுடன், இரத்த அழுத்தத்தைக் குறைத்து உயிருக்கு உலை வைக்கும் நிலைக்குக் கொண்டு செல்லும். இந்தத் தருணத்தில் உடனடியாகத் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படாவிட்டால் மரணம் நிகழ வாய்ப்புகள் அதிகம்.

ADVERTISEMENT

சாதாரணச் சளிக்கும் இதற்கும் உள்ள முக்கிய வித்தியாசம்

நமக்கு ஒரு சந்தேகம் வரலாம், சளி மற்றும் மூச்சுத் திணறல் இருந்தால் அது ஹான்டா வைரஸ்தான் என்று எப்படி உறுதி செய்வது? ஒரு முக்கியமான வேறுபாடு என்னவென்றால், ஹான்டா வைரஸ் பாதிப்பு உள்ளவர்களுக்குப் பொதுவாகச் ‘சளி’ (Runny nose) திரவம் மூக்கிலிருந்து வராது. அதேபோல் தொண்டை வலி (Sore throat) இருப்பதும் அரிது. உங்களுக்குக் காய்ச்சல் மற்றும் தசை வலி இருந்து, அதனுடன் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டால், ஆனால் சளி மற்றும் தொண்டை வலி இல்லை என்றால் நீங்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். குறிப்பாக கடந்த சில நாட்களில் எலிகள் இருந்த இடத்தைச் சுத்தம் செய்திருந்தாலோ அல்லது எலி நடமாட்டம் உள்ள பகுதியில் தங்கியிருந்தாலோ அந்தத் தகவலை மருத்துவரிடம் மறைக்காமல் சொல்ல வேண்டும்.

பாதுகாப்பு முறைகள்: தற்காத்துக் கொள்வது எப்படி?

வருமுன் காப்பதே சிறந்தது என்ற பழமொழி ஹான்டா வைரஸிற்கு மிகச்சரியாகப் பொருந்தும். உங்கள் வீட்டில் எலிகள் வராமல் பார்த்துக் கொள்வதே முதல் கட்டத் தற்காப்பு. எலிகள் புகக்கூடிய ஓட்டைகளை அடைக்க வேண்டும். பழைய அறைகளை அல்லது குடோன்களைச் சுத்தம் செய்யும்போது முகக்கவசம் மற்றும் கையுறைகளைத் தவறாமல் அணியுங்கள். எலி எச்சங்கள் கிடக்கும் இடத்தைப் பெருக்கும்போது, அந்தத் தூசி காற்றில் பரவி உங்கள் சுவாசக் குழாய்க்குள் செல்ல வாய்ப்புள்ளது. எனவே, அந்த இடத்தை நேரடியாகப் பெருக்காமல், பிளீச்சிங் பவுடர் அல்லது கிருமிநாசினி கலந்த நீரைத் தெளித்து ஈரமாக்கிய பிறகு துடைப்பது பாதுகாப்பானது. உணவுகளை எலிகள் நெருங்காதவாறு மூடி வைப்பதும், கைகளை அடிக்கடி சோப்பு போட்டுத் தேய்த்துக் கழுவுவதும் இந்த வைரஸ் தொற்றிலிருந்து உங்களைக் காக்கும் எளிய வழிகளாகும்.

ADVERTISEMENT

இதையும் படிங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share