2026ஆம் ஆண்டு கரீஃப் (Kharif) பருவத்திற்கான பாஸ்பேட் மற்றும் பொட்டாசியம் (P&K) உரங்களுக்கு ரூ.41,534 கோடி மானியம் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மானியம் கடந்த ஆண்டை விட சுமார் 12 சதவீதம் அதிகமாகும். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவின் (CCEA) கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த மானியம் ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30 வரை பொருந்தும்.
2025-ஆம் ஆண்டு கரீஃப் பருவத்துடன் ஒப்பிடுகையில், மானியம் ரூ. 4,317 கோடி அதிகரிக்கப்பட்டுள்ளது என்று தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். ஊட்டச்சத்துக்கள் மீதான மானிய விகிதங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. 2026ஆம் ஆண்டு கரீஃப் பருவத்திற்கு, ஒரு கிலோ கிராமிற்கான மானிய விகிதத்தை அரசாங்கம் பின்வருமாறு நிர்ணயித்துள்ளது:
- நைட்ரஜன்: ரூ.47.32
- பாஸ்பேட்: ரூ.76
- பொட்டாஷ்: ரூ.2.38
- சல்பர்: ரூ.3.16
இந்த முறை அரசாங்கம் நைட்ரஜன், பாஸ்பேட் மற்றும் சல்பர் மீதான மானிய விகிதங்களை அதிகரித்துள்ளது. அதே சமயம் பொட்டாஷின் விகிதம் கடந்த ரபி பருவத்தில் இருந்ததைப் போலவே வைக்கப்பட்டுள்ளது.
2010 ஏப்ரல் மாதம் முதல் நடைமுறையில் உள்ள ஊட்டச்சத்து அடிப்படையிலான மானியத் திட்டத்தின் (NBS) கீழ், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் (P&K) உரங்களுக்கு மானியங்கள் வழங்கப்படுகின்றன. இத்திட்டம் 28 வகையான உரங்களுக்கு மானியம் வழங்குகிறது. டிஏபி (DAP), எம்ஓபி (MOP), மற்றும் என்பிகே (NPK) போன்ற யூரியா அல்லாத உரங்களின் சில்லறை விலைகள் நிறுவனங்களால் நிர்ணயிக்கப்படுகின்றன, அதே நேரத்தில் அரசாங்கம் நிலையான மானியங்களை வழங்குகிறது.
நிதி ஒதுக்கீடு:
2026-27 நிதியாண்டிற்கான ஊட்டச்சத்து அடிப்படையிலான மானியத் திட்டம் மற்றும் யூரியா மானியத் திட்டத்தின் கீழ் மொத்த நிதி ஒதுக்கீடு சுமார் ரூ.1,70,799 கோடியாக வைக்கப்பட்டுள்ளது. இதில் 2026 கரீஃப் மற்றும் 2026-27 ரபி ஆகிய இரண்டு பருவங்களும் அடங்கும். அரசாங்கத்தின் இந்த முடிவு விவசாயிகளுக்கு சாகுபடி செலவைக் குறைக்க உதவும் மற்றும் கரீஃப் பருவத்தில் உற்பத்தியை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
