திகைக்கும் அளவுக்கு ‘த்ரில்’ ஊட்டுகிறதா?
‘த்ரில்லர்’ படங்களுக்கான ஐடியா, காட்சியமைப்பு, கதாபாத்திர வார்ப்பு என்று எழுத்தாக்கத்தில் என்னதான் உழைப்பைக் கொட்டினாலும், அவற்றைத் திரைக்குக் கொண்டுவரும்போது பிசகுகள் இல்லாமல் பார்த்துக்கொள்ள அதீத கவனம் செலுத்த வேண்டும்.
திரைக்கதையின் தொடக்கத்தில் வரும் முதல் முடிச்சு தொடங்கி இறுதி வரை ஏதேனும் திருப்பங்களைத் தந்தவாறு இருக்க வேண்டும். இல்லாவிட்டால் ‘ப்ச்..’ என்ற சலிப்பு சத்தத்தை ரசிகர்களிடம் இருந்து கேட்க வேண்டியிருக்கும். Eleven movie review minnambalam
லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் நவீன் சந்திரா, ரியா ஹரி, சஷாங்க், அபிராமி, திலீபன், ரித்விகா, அடுகளம் நரேன் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘லெவன்’ அந்த வகையில் என்ன விதமான திரையனுபவத்தைத் தருகிறது? Eleven movie review minnambalam

சிறு பொறி!
சென்னை புறநகர் பகுதிகளில் அடுத்தடுத்துச் சில கொலைகள் நடக்கின்றன. முற்றிலுமாக எரிக்கப்பட்ட நிலையில் அந்த சடலங்கள் கிடைக்கின்றன. கிடைக்கிற தடயங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட உடற்கூராய்வில் அத்தனை பேரும் நெற்றியில் சுடப்பட்டு உடனடியாக உயிரிழந்தபிறகு எரிக்கப்பட்டது தெரிய வருகிறது. Eleven movie review minnambalam
கொலையானவரின் அடையாளங்கள் கிடைக்காத காரணத்தால், ஒரே மாதிரியாக அந்த கொலைகள் நிகழ்ந்திருப்பதால், ‘இது ஒரு சைக்கோ கொலைகாரனின் வேலை’ என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகின்றன.
இந்த வழக்கை விசாரிக்கிற பொறுப்பு உதவி ஆணையர் ரஞ்சித் குமாரிடம் (ஷஷாங்க்) தரப்படுகிறது. ஆனால், திடீரென்று நிகழ்ந்த விபத்தில் சிக்கி அவர் கோமா நிலைக்குச் செல்கிறார். அவருக்குத் தீவிர சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.

இந்த நிலையில், நகரத்தில் போதை மாத்திரைகளைப் பெருமளவில் கைப்பற்றிய, வங்கி கொள்ளையில் ஈடுபட்டவர்களைச் சுற்றி வளைத்து கைது செய்த போலீஸ் அதிகாரி அரவிந்தனிடம் (நவீன் சந்திரா) இந்த பொறுப்பை ஒப்படைக்கிறார் காவல் ஆணையர் (ஆடுகளம் நரேன்). ஏற்கனவே அந்த வழக்கை விசாரிக்கிற குழுவில் இருந்த இன்ஸ்பெக்டர் மனோகர் (திலீபன்) அவருக்கு உதவிகரமாக இருக்கிறார்.
அரவிந்தன் அந்த வழக்குகளைக் கையாளத் தொடங்கியபிறகும், சில கொலைகள் நடக்கின்றன. ஆனால், ஒரு சடலத்தில் காலில் அறுவைச்சிகிச்சை செய்ததற்கான மருத்துவ தடயம் கிடைக்கிறது. அதனைக் கொண்டு புலனாய்வு செய்கிறபோது சுரேந்தர் (கீர்த்தி தாமராஜு) என்ற நபருக்கு அந்த சாதனம் பொருத்தப்பட்டதாகத் தெரிய வருகிறது.
அவரது வீட்டிற்குச் செல்கிறார் அரவிந்தன். அங்கு சுரேந்தர் என்ற பெயரில் ஒரு நபர் இருக்கிறார். ஆனால், அவர் செய்கைகளில் தடுமாற்றம் தென்படுகிறது.
அதே நேரத்தில், ஒரு இளம்பெண் கடத்தப்பட்டதாகத் தகவல் சொல்கிறார் ஒரு பிச்சைக்காரர். கிடைத்த தடயங்களை வைத்து, அப்பெண்ணின் வீட்டிற்குச் செல்கின்றனர் போலீசார். அங்கு தாரா (ரித்விகா) என்ற பெயரில் ஒரு பெண் இருக்கிறார்.
அந்த வீட்டிற்குள் நுழைகிறார் மனோகர். அப்போது தாராவுக்கு ஒரு இரட்டை சகோதரி இருப்பது தெரிய வருகிறது. Eleven movie review minnambalam
அதன்பிறகு சுதாகரும் தாராவும் ஒரே பள்ளியில் படித்தவர்கள் என்று தெரிகிறது. ஏற்கனவே கொலையானவர்களும் அதே பள்ளியில் ஒரே வகுப்பில் படித்தவர்கள் தான். அனைவருமே இரட்டையர்கள். மொத்தம் பதினோரு இரட்டையர்கள் அந்த வகுப்பில் இருந்திருக்கின்றனர்.
சுதாகரிடமும் தாராவிடமும் விசாரிக்கையில், தங்களுடன் படித்த பெஞ்சமின் இந்த கொலைகளைச் செய்திருக்கலாம் என்கின்றனர். அதனைத் தொடர்ந்து அந்த நபரைத் தேடிப் புலனாய்வை மேற்கொள்கிறார் அரவிந்தன்.
யார் இந்த பெஞ்சமின்? அவர் ஏன் தன்னுடன் படித்த சக மாணவ மாணவியரைக் கொலை செய்ய வேண்டும்? இந்த கேள்விகளுக்கான பதில்களை ஒரு பிளாஷ்பேக் மற்றும் நிறைய திருப்பங்களுடன் தருகிறது ‘லெவன்’.

உண்மையைச் சொன்னால், ஒரு ‘த்ரில்லருக்கு’ ஏற்ற காட்சியமைப்பும் திரைக்கதை நகர்வும் இதிலிருக்கிறது. அதனைச் சிறப்பாக ஆக்கியிருப்பதால் ‘சலிப்பு’ தட்டவில்லை. ஒரு சிறு பொறியை ஊதிப் பெரிதாக்குவது போன்ற திரையனுபவத்தைத் தருகிறது.
ஆனால், கதையில் இருக்கிற லாஜிக் மீறல்கள்தான் ஆங்காங்கே திரையுடன் நாம் ஒன்றி நிற்பதை விலக்கி விடுகின்றன.
எப்படிப்பட்ட முயற்சி?
இதில் நாயகனாக நவீன் சந்திரா நடித்திருக்கிறார். பழனியப்பா கல்லூரி தொடங்கி சரபம், சிவப்பு, பட்டாஸ் என்று பல படங்களில் நடித்தாலும், இவருக்குப் புகழைத் தந்ததென்னவோ தெலுங்கு திரையுலகம் தான். அதற்கேற்ப இது ‘பைலிங்குவலாக’ உருவாக்கப்பட்டிருக்கிறது.
படம் முழுக்க இறுக்கமான போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார் நவீன் சந்திரா. ‘செயற்கை’ என்று சொல்லிவிட முடியாதவாறு ‘அளவாக’த் தனது நடிப்பைத் தந்திருப்பது அருமை.
அவருக்கு அடுத்தபடியாக இதில் திலீபன் வந்து போயிருக்கிறார். தன் குழந்தையிடம் பாசம் காட்டுகிற காட்சிகள் அவருக்குத் தரப்பட்டிருக்கின்றன.
நவீன் சந்திராவைக் காதலிப்பவராக ரியா ஹரி நடித்திருக்கிறார். தயாரிப்பாளர் என்ற முறையில் அவர் இதில் இடம்பெற்றாரா என்று தெரியவில்லை. அவரது இருப்பு நம்மை முழுமையாகக் கவரவில்லை.
இது போக தெலுங்கு கலைஞர்கள் சஷாங், ரவி வர்மா, கீர்த்தி தாமராஜு மற்றும் ரித்விகா, ஆடுகளம் நரேன், அர்ஜய் என்று பலர் இதில் நடித்திருக்கின்றனர்.
பிளாஷ்பேக் காட்சியில் ஆசிரியராக வரும் அபிராமி பாத்திரம் நம்மை ஈர்க்கும் வகையில் இருக்கிறது. Eleven movie review minnambalam
இந்த படத்தின் மிகப்பெரிய பலம், ’இது செம்மையாக உருவாக்கப்பட்ட படம் தான்’ என்ற எண்ணத்தை ஊட்டுகிற கார்த்திக் அசோகனின் ஒளிப்பதிவு. ஒவ்வொரு பிரேமையும் பார்த்து பார்த்துச் செதுக்கியிருக்கிறார். டிஐயின் முக்கியத்துவம் பளிச்சிடும்படி செய்திருக்கிறார்.
படத்தைத் தொகுத்திருக்கும் என்.பி.ஸ்ரீகாந்த் கதை சீராகத் திரையில் விரிவதை உறுதிப்படுத்தியிருக்கிறார். என்ன, கிளைமேக்ஸ் திருப்பத்தை மட்டும் இன்னும் சரிவரத் திரையில் சொல்லியிருக்கலாம் என்ற வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.
டி.இமான் இசையில் பாடல்கள் சட்டென்று மனதோடு ஒட்டிக் கொள்கின்றன. பின்னணி இசையைப் பொறுத்தவரை, கொலையாளி வருகிற இடங்களில் ரொம்ப பயமுறுத்த வேண்டும் என்று மெனக்கெட்டிருக்கிறார். சில இடங்களில் மௌனத்திற்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம். இயக்குனர் லோகேஷ் அஜில்ஸும் அதற்கேற்ற உள்ளடக்கத்தைக் கொடுக்காமல் கோட்டை விட்டிருக்கிறார்.
கலை இயக்குனர் பி.எல்.சுபேந்தர், ஸ்டண்ட் மாஸ்டர் பீனிக்ஸ் பிரபு, ஒலி வடிவமைப்பாளர் ராஜகிருஷ்ணன் உட்படப் பலரது உழைப்பு இதில் அடங்கியிருக்கிறது.

இப்படத்தை எழுத்தாக்கம் செய்து இயக்கியிருக்கிறார் லோகேஷ் அஜில்ஸ். சிறப்பானதொரு ‘த்ரில்’ அனுபவத்தைத் தருவதற்காக, இரட்டையர்கள் படிக்கிற பள்ளி எனும் விஷயத்தையும் கையிலெடுத்திருக்கிறார்.
நிச்சயமாக, தினசரிகளில் வந்த ஒரு தகவலைப் பார்த்து ஊக்கம் பெற்று புதிய திசையில் இக்கதையை அவர் வடித்திருக்க வேண்டும். அவ்வாறு நிகழ்ந்திருந்தால் மகிழ்ச்சி.
’கொலையாளி யார்’ என்று காட்டப்படுகிறபோது நமக்குள் ‘ஏன் இப்படியொரு ட்விஸ்ட்’ என்ற கேள்வி எழுகிறது. ஆனால், அதனை மீறி படத்தில் ‘செகண்ட் கிளைமேக்ஸ்’ வருகிறது. அதில் நம்மைச் சுண்டியிழுக்கிறார் இயக்குனர். ’இது எப்படிப்பட்ட முயற்சி’ என்பதைச் சொல்கிற அளவுக்கு அது திகைப்பைத் தரும். Eleven movie review minnambalam
உண்மையில், அது போன்ற விஷயங்களைக் கவனத்துடன் கோர்த்து லாஜிக் மீறல்கள் தலையெடுப்பதைக் கட்டுப்படுத்தியிருக்கலாம். அதையும் மீறி இப்படத்தை ரசிக்க முடியும். காரணம், ஆத்மார்த்தமாகப் படத்தில் பணியாற்றிய அனைவரும் கொட்டியிருக்கிற உழைப்பு..!