அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்கக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று (ஏப்ரல் 10) விசாரணைக்கு வருகிறது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன. பின்னர் மீண்டும் அந்த பதவிகள் நீக்கப்பட்டு பொதுச்செயலாளர் பதவி கொண்டு வரப்பட்டது.
இதற்காக நடைபெற்ற தேர்தலில் போட்டியின்றி பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார் எடப்பாடி பழனிசாமி. இதுகுறித்த கோப்புகளையும் தேர்தல் ஆணையத்துக்கு அதிமுக சார்பில் அனுப்பி வைக்கப்பட்டது.
இதனிடையே கர்நாடகா தேர்தலில் அதிமுக போட்டியிட இருப்பதாகவும், வழக்குகள் காரணமாக அதிமுகவில் கட்சி ரீதியான மாற்றங்களை இந்தியத் தேர்தல் ஆணையம் அங்கீகரிக்காததால் வேட்பாளர்களை நிறுத்துவதில் சிக்கல் ஏற்பட்டிருப்பதாகவும் அதிமுக தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி சார்பில் வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன் கடந்த வாரம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில், கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அங்கீகரித்து அவற்றை இணையதளத்தில் பதிவேற்ற இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி பிரதீபா எம்.சிங் முன்பு இன்று (ஏப்ரல் 10) விசாரணைக்கு வருகிறது.
பிரியா