கேப்டன் மில்லர் : விமர்சனம்!

Published On:

| By christopher

Dhanush Captain Miller Review

இயக்குனர் அருண் மாதேஸ்வரனின் கற்பனை உலகம்!

‘மகாத்மா காந்திய தென்னாப்பிரிக்காவுல ஒரு ட்ரெயின்ல இருந்து வெள்ளைக்காரன் கீழே தள்ளுனான்ல’

’ஆமா, அது பாசஞ்சர் ட்ரெயின் மாதிரி இருக்கும்’

‘இல்ல, அது ஒரு மெட்ரோ ரெயின். ம்ஹும், அது கூட நல்லா இருக்காது. அது ஒரு புல்லட் ட்ரெயின்னு வச்சுக்குவோம்’

‘சார், அது ஜப்பான்ல தான் ஓடுது. நம்மூருக்கே இன்னும் வரலை’

‘அட என்னப்பா, ஒரு கதைய ஸ்க்ரீன்ல பார்க்குறப்போ ரிச்சா தெரிய வேணாமா’

‘அதுக்கு இப்போ நடக்குற மாதிரி ஒரு கதைய யோசிக்கலாமே’

‘சுதந்திரப் போராட்டம், வெள்ளையனே வெளியேறு இதெல்லாம் இருந்தா கிடைக்குற இம்பாக்ட் வேற.. அதுக்கு பீரியட் பிலிம் பண்ணாதான் கரெக்டா இருக்கும்’

‘அப்போ புல்லட் ட்ரெயின் வேண்டாமே’

‘இல்ல, அது இருந்தாதான் ரிச்சா, ஸ்டைலா, கூஸ்பம்ஸ் மொமண்ட்ஸ் நிறைய கிடைக்கும்’

மேற்சொன்னது போல இயக்குனர் குழுவில் விவாதம் நடந்து, புல்லட் ட்ரெயினில் இருந்து மகாத்மாவைக் கீழே தள்ளுவது மாதிரி ஒரு காட்சியைப் படம்பிடித்தால் எப்படியிருக்கும்? அதைப் பார்த்துவிட்டு, ’தென்னாப்பிரிக்காவுல புல்லட் ட்ரெயின் அப்பவே வந்துருச்சா’ என்று மட்டும் கேட்டுவிடக் கூடாது. அதற்குத் தயார் என்றால், அதே மாதிரியான காட்சியனுபவத்தைத் தருகிற கேப்டன் மில்லரையும் ரசிக்கலாம்.

இது விமர்சனத்தோட முடிவா ஆரம்பமான்னு யோசிக்கிறீங்களா? கவலையை விட்டொழியுங்கள். ’கேப்டன் மில்லர்’ படம் எப்படிப்பட்டது என்பதற்கான முன்னோட்டமே மேலே சொன்னது.

Dhanush Captain Miller Review

யார் இந்த மில்லர்?

ஒரு கோயில். அதன் முன்னே ஒடுக்கப்பட்ட மக்கள் பெருங்கூட்டமாக வசிக்கின்றனர். அவர்களால் அந்த கோயிலுக்குள் நுழைய முடியாது. காரணம், அப்பகுதியை ஆண்டுவரும் ராஜாதிபதி (ஜெயபிரகாஷ்) குடும்பத்தினர் விதித்த கட்டுப்பாடுகள். அவரே, ஆங்கிலேயர்களுக்கு விசுவாசமாக, ஒரு கீழ்படிந்த அடிமையாகத்தான் இருந்து வருகிறார்.

கோயில் எதிரே உள்ள குடியிருப்பில் வசிப்பவர்களுள் ஒருவர் அனலீசன் (தனுஷ்). அவரது சகோதரர் செங்கோலன் (சிவராஜ்குமார்). அவர்களைப் பெற்ற தாய் (விஜி சந்திரசேகர்), அந்த கோயிலைக் கட்டக் காரணமாக இருந்த கோரனாரின் வம்சாவளியினர் நாம் என்று அங்கிருக்கும் மக்களுக்குத் தமது பூர்விகத்தைக் கதைகளாகச் சொல்லி வருகிறார்.

திருவிழா நடக்கையில், ராஜாதிபதியின் ஆட்கள் தாக்கியதில் அனலீசன் தாய் மரணிக்க, ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டத்தில் சகோதரர் செங்கோலன் என்னவானார் என்று தெரியாமல் போக, தான் சமூகத்தில் மரியாதையாக நடத்தப்படப் பட்டாளத்தில் சேர்வதுதான் ஒரே வழி என்று சிப்பாய் ஆகிறார் அனலீசன்.

ராணுவத்திலாவது தனக்கான மரியாதையும் வாழ்வும் கிடைக்கும் என்று நம்புகிறார். ஆனால், அப்பாவி மக்களைக் கொன்று குவிக்கத்தான் தனது பதவி பயன்படும் என்று தெரிந்ததும், அங்கிருந்து வெளியே வருகிறார். அதற்கு முன்னதாக, படையின் தலைவனைக் கொன்று ’ஹிட்லிஸ்ட்’டில் இடம்பிடிக்கிறார்.

’அடுத்து என்ன’ என்று தெரியாமல் நிர்க்கதியாக இருக்கும் அனலீசனுக்கு ஒரு கொள்ளையர் கூட்டத்தின் அறிமுகம் கிடைக்கிறது. அவர்களோடு சேர்ந்து கொள்ளையடித்து வாழ்பவர், திடீரென்று குண்டடி பட்டு உயிருக்கே ஆபத்தான நிலையை அடைகிறார். அப்போது மருத்துவர் வேல்மதி (பிரியங்கா அருள்மோகன்) அவரைக் காக்கிறார்.

ஆனால், தனது காதல் கணவரைக் கொன்ற ஆங்கிலேயப் படையில் அனலீசனும் இருந்தார் என்றறியும்போது, அவரை வெறுக்கத் தொடங்குகிறார் வேல்மதி. தனது குற்றவுணர்ச்சியை ஈடுகட்ட எதைச் செய்யவும் தயாராக இருக்கிறார் அனலீசன். அவரிடம், கவர்னர் மகன் ரைலியைக் கொல்ல வேண்டும் என்கிறார் வேல்மதி.

ஊர் கோயில் கருவறைக்கு அடியில் இருக்கும் புதையல் பெட்டியில் இருந்து கோரனாரின் சிலையை ரைலி கவர்ந்து செல்ல, அதைத் திருடித் தங்களிடம் தருமாறு ராஜாதிபதியும் அவரது மகனும் அனலீசனைத் தேடி வருகின்றனர். பதிலுக்கு, அனலீசன் சமூகத்தைச் சேர்ந்தவர்களைக் கோயிலுக்குள் செல்ல அனுமதிப்பதாக வாக்களிக்கிறார் ராஜாதிபதி. ஆனால், இது தொடர்பான பேச்சுவார்த்தையில் அனலீசன் நேரடியாக ஈடுபடாததால் அவருக்கு எதுவும் தெரியாது.

இதற்கிடையே, கோரனார் சிலையை அனலீசன் திருடியதும் அவரைக் கொல்வதென்று திட்டமிடுகின்றனர் ராஜாதிபதியும் அவரது மகனும். சிலையை எடுத்துக்கொண்டு எங்காவது சென்றுவிடலாம் என்று யோசிக்கிறார் அனலீசன். இவர்களுக்கு இடையே இப்படியே இன்னும் சில காலம் வாழ்ந்துவிட முடியாதா என்று அப்பாவி மக்கள் அடிமைத்தனத்தைச் சுமந்துகொண்டு வாழ்ந்து வருகின்றனர்.

அதன்பிறகு என்னவானது? ராஜாதிபதி மட்டுமல்லாமல் ஆங்கிலேயரும் தனது எதிரி தான் என்றெண்ணும் அனலீசன் என்ன செய்தார்? தாய் வணங்கிய கோரனார் சிலையை மீட்டாரா? அவரது சமூகத்தவர்கள் நிலை என்னவானது என்று நீள்கிறது ‘கேப்டன் மில்லர்’.

இந்தக் கதையில், கேப்டன் மில்லர் என்பவர் யார் என்ற கேள்வி உங்களுக்குத் தோன்றும். அனலீசன் என்ற பெயரை விளிக்க முடியாமல், ஆங்கிலேயர் வைத்த பெயரே ‘மில்லர்’. ‘கேப்டன்’ ஆக வேண்டும் என்பது அனலீசனின் ஆசை. இவை இரண்டும் சேர்ந்ததுதான் படத்தின் டைட்டில்.

இதைச் சொன்னதும், வெள்ளையர்கள் படையில் அனலீசன் என்ற ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மனிதரொருவர் படும் பாடு மங்கள் பாண்டேவின் இன்னொரு துருவம் போலிருக்கும் என்று நீங்கள் நினைக்கலாம். அது தவறு. அந்த பகுதி மொத்தப்படத்தில் அந்தப் பகுதி இருபது நிமிடங்கள் கூட தேறாது.

Dhanush Captain Miller Review

அபாரமான கூட்டுழைப்பு!

ஒரு வெப்சீரிஸ் போல இந்த படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் அருண் மாதேஸ்வரன். அதற்கு ஏற்றாற்போல, சுமார் அரை மணி நேரத்திற்கு மேல் ஓடும் வகையில் சில அத்தியாயங்களாக இக்கதையைப் பிரித்திருக்கிறார். ஒவ்வொரு அத்தியாயத்திலும் சுமார் இரண்டு டஜன் பாத்திரங்கள், வெவ்வேறுபட்ட களங்கள் காட்டப்படுகின்றன.

அச்சூழலைத் திரையில் திறம்படக் கடத்தியதில் பெரும்பங்கினை வகிக்கிறார் ஒளிப்பதிவாளர் சித்தார்த்த நுனி. சில இடங்களில் வழக்கத்திற்கு மாறான கோணங்கள், கேமிரா நகர்வு, ஒளியமைப்பு ஆகியன பிரமிப்பூட்டுகின்றன.

நாகூரான் ராமசந்திரன் மிகவும் கஷ்டப்பட்டு ‘எடிட்’ செய்திருக்கிறார் என்பது படம் தொடங்கியவுடனேயே பிடிபடுகிறது.

கலை இயக்குனர் தா.ராமலிங்கம் படப்பிடிப்பின்போதும் அதற்கு முன்னதாகவும் பம்பரமாகச் சுற்றிச் சுழன்றிருக்கிறார் என்பது படத்தைப் பார்க்கையில் தெரிய வருகிறது.

இன்னும் சண்டைப்பயிற்சி, ஒலி வடிவமைப்பு, ஆடை அணிகலன்கள், ஒப்பனை, விஎஃப்எக்ஸ் என்று எத்தனையோ நுட்பங்கள் பலரது அபாரமான உழைப்பை ஒன்றிணைத்து திரையில் மிளிர்கின்றன.

எல்லாம் சரி. இந்த படத்தின் கதையமைப்பு எவ்வாறு உள்ளது?

இக்கேள்விக்குப் பதில் சொல்வது கடினம். ஏனென்றால், தோராயமாகச் சொன்னால் இது ‘சுதந்திரப் போராட்டம்’ குறித்த வழக்கமானதொரு சினிமா கதை. அதில் சாதீய வேறுபாடுகள் மிகுந்திருப்பதும் அது தொடர்பான சிந்தனைகள் கதையின் ஆணிவேராக இருப்பதும்தான் வித்தியாசம்.

இந்தக் கதைக்குப் பலவிதமான பாத்திரங்கள். அவற்றின் உடல்மொழி மற்றும் வசனங்கள். வேறுபட்ட சூழல்கள். மனித முரண்பாடுகளைச் செறிவாக உணரச் செய்யும் காட்சியமைப்பு என்று ஆளுயுர ரப்பர் பொம்மைக்கு உயிர் கொடுக்க முயன்றிருக்கிறது எழுத்தாக்கம் செய்துள்ள மதன் கார்கி மற்றும் அருண் மாதேஸ்வரன் கூட்டணி. அதற்குப் பலன் கிடைத்திருக்கிறதா என்பது அவரவர் மனவோட்டத்தைப் பொறுத்தது.

இதன் அடுத்த பாகம் வெளிவரும் என்ற நம்பிக்கையை விதைக்கும் வகையில் முடிவு அமைந்துள்ளது. அதில் ஒரு கதாபாத்திரத்தின் பெயரையும் குறிப்பிடுகிறார் இயக்குனர். அந்த கதாபாத்திரத்தைப் படம் முழுக்கக் கண்ணில் காட்டவில்லை என்பதுதான் குறிப்பிட வேண்டிய விஷயம். இதுவே படத்தொகுப்புக்கு முன்னதாக இதன் நீளம் என்னவாக இருந்திருக்கும் என்ற சிந்தனையைத் தூண்டுகிறது.

இந்தக் கதையில் தனுஷ் தொடங்கி நிவேதா சதீஷ், வினோத் கிஷன், அப்துல் லீ, அஸ்வின் குமார், அருணோதயன், அதிதி பாலன், சந்தீப் கிஷன், பிரியங்கா அருள்மோகன், ஜான் கொக்கன், காளி வெங்கட் என்று பலர் நடித்துள்ளனர். குமரவேல், ஜெயபிரகாஷ், விஜி சந்திரசேகர் உள்ளிட்ட சில மூத்த கலைஞர்கள் ஆர்ப்பாட்டமில்லாமல் மனதைக் கொள்ளையடிக்கின்றனர். கர்நாடகக் கரையோரம் வணிக வெற்றிகளைப் பெறும் வகையில் சிவராஜ்குமார் சில காட்சிகளுக்கு வந்து போகிறார்.

இன்னும் பெயர் குறிப்பிட முடியாத அளவுக்குச் சில பிரபலங்கள் ஓரிரு காட்சிகளில் தோன்றியிருக்கின்றனர். ஆனால், அவர்களது இருப்பும் பங்களிப்புமே இத்திரைக்கதையைச் செறிவுமிக்கதாக எண்ண வைக்கிறது என்பதை மட்டும் மறுக்க முடியாது.

Dhanush Captain Miller Review

 பார்வை வேறுபாடு!

ராஜமவுலி இயக்கத்தில் ‘ஆர் ஆர் ஆர்’ வெளியானபோது, இந்திய சுதந்திரப் போராட்டத்தை இப்படி மலினப்படுத்துவானேன் என்றே தோன்றியது. காரணம், ஒரு கமர்ஷியல் படத்திற்குத் தகுந்தவாறு அதனை உருமாற்றக் கூடாது என்பதுதான்.

ரத்த சாட்சியும் விடுதலையும் ஒரே எழுத்தாளரின் சிறுகதையில் இருந்து விளைந்த திரைப்படங்கள் தான். இரண்டுமே புரட்சிப் போராட்டத்தையே முன்வைத்தன. ஆனால், விடுதலை ஏன் ஒரு பார்வையாளருக்கு நெருக்கமானதாகத் தெரிகிறது?

அதேவிதமான பார்வைதான் ‘கேப்டன் மில்லர்’ பார்க்கையிலும் துருத்தல்களை அடையாளம் காணச் செய்கிறது. காரணம், துப்பாக்கி கலாசாரம் வட இந்தியாவில் இருக்குமளவுக்கு தென்னிந்தியாவில் இல்லை. இப்போதைய கணம் வரை இதுவே பொதுஜனத்தின் மனதிலிருக்கும் கருத்தாக உள்ளது. நிலைமை இப்படியிருக்க, சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் அதற்குத் தலைகீழான சூழல் இருந்ததாகச் சொல்வதை எப்படி ஏற்பது?

’இல்லை, இந்தக் கதையின் கூறுகளை உள்வாங்கி அவற்றை படிமங்களாகக் கருத வேண்டும்’ என்று சிலர் வாதங்களை முன்வைக்கலாம். அந்த படிமங்கள் படக்குழுவினர் எடுத்துச் சொன்னால் மட்டுமே புரியும் என்றால், நிச்சயம் அதெல்லாம் தேவையில்லாத ஆணிகள் தாம்.

இந்த பார்வை தனிப்பட்ட மனிதர் ஒருவருடையது. இன்னொருவருக்கு அதில் மாற்றுக்கருத்து இருக்கலாம். கேப்டன் மில்லர் படத்தின் வெற்றி என்பது அப்படிப்பட்ட மாற்றுக்கருத்துகளின் குவியலில் அடங்கியிருக்கிறது.

லாஜிக் மீறல்கள் டன் கணக்கில் இருக்கும் இந்தக் கதையை, அருண் மாதேஸ்வரன் மனதில் எழுந்துள்ள கற்பனை உலகமாகவே கருத வேண்டும். அப்படி எண்ணினால் மட்டுமே, இப்படத்தைப் பார்க்கத் திரையரங்கினுள் நுழைய முடியும்.

யதார்த்தத்தில் பொதிந்திருக்கும் சில தகவல்களைக் கொண்டு, தனக்குப் பிடித்தமான ஒரு உலகத்தைத் திரையில் முன்னிறுத்தியிருக்கிறார் இயக்குனர் அருண் மாதேஸ்வரன். ‘கேப்டன் மில்லர்’ படத்தைப் பார்க்க வேண்டுமா வேண்டாமா என்று முடிவெடுக்க, தொடக்கத்தில் உள்ள பத்தியை மீண்டுமொரு முறை படித்துப் பார்ப்பது பலன் தரும்..!

உதய் பாடகலிங்கம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

தங்கம் விலை குறைந்தது: இன்றைய நிலவரம்!

அலங்காநல்லூர் செல்லும் ஸ்டாலின் : அமீர் வைத்த முக்கிய கோரிக்கை!

சாதனைகளை அடித்து நொறுக்கிய ‘ரோகித் சர்மா’: பட்டியல் இதோ!

கடும் போட்டி: சாம்சங்கை பின்னுக்குத்தள்ளி சாதனை படைத்தது ஆப்பிள்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share