பிரபல நடிகர்கள் மேல் பாலியல் குற்றச் சாட்டுகள் வருவது இயல்புதான். காய்த்து, பழுத்து இருக்கும் மரங்களின் மேல்தானே குருவி வந்து உட்காரும்? எனவே அந்த செய்திகள் முழு உண்மையாக அல்லது முழு பொய்யாக , கொஞ்சம் உண்மை கலந்த பொய்யாக , கொஞ்சம் பொய் கலந்த உண்மையாக இருக்கலாம்.
கிசுகிசுவாக இல்லாமல் நேரடியாக வரும்போது அது இன்னும் வீரியம் பெறுகிறது.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வானத்தை போல என்ற தொடரில் துளசி கதாபாத்திரத்தில் நடித்தவர் மான்யா ஆனந்த். அந்த தொடர் முடிந்த பிறகு கயல். அன்னம், மருமகள் சீரியல்களின் சங்கமத்தில் ஒரு ஸ்பெஷல் ரோலில் நடித்திருந்தார்.
அண்மையில் அவர் கொடுத்த பேட்டி ஒன்றில் , “கடந்த சில மாதங்களுக்கு முன் ஒருவரிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அவர் தனுஷின் மேனேஜர் . தனுஷ் சார் புதிதாக தயாரிக்க இருக்கும் திரைப்படத்தில் நடிப்பீங்களா என்று என்னிடம் கேட்டார். நானும், சினிமாவில் நடிப்பதற்கு தயார்தான். ஆனால், ஓவர் கவர்ச்சி காட்ட மாட்டேன் என கூறிவிட்டேன். அதை தொடர்ந்து அவர், அட்ஜஸ்ட்மென்ட் குறித்து பேசினார் நான் அட்ஜஸ்ட்மென்ட் எல்லாம் செய்ய மாட்டேன். அதில், எனக்கு விருப்பமில்லை அப்படி எனக்கு எந்த பட வாய்ப்பும் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். அதன் பிறகு தனுஷுக்கே என்றாலும் கூடவா என்று கேட்டார். உடனே நான், அந்த உரையாடலை நிறுத்திக் கொண்டேன்.
இதே போல வேறு ஒருவரும் தனுஷின் பெயரை பயன்படுத்தி, அவரின் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரை குறிப்பிட்டு வாய்ப்பு தருவதாக சொல்லி, அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என கூறினார். எனக்கு மட்டுமல்ல இது போல பல நடிகைகளுக்கும் இதுபோல அழைப்பு வருகிறது. இது தனுஷ் அவர்களுக்கு தெரியாமல் நடக்கலாம். அதற்காகத்தான் இந்த விஷயத்தை நான் இப்போது வெளிப்படையாக சொல்கிறேன், இது என்ன என்று விரைவில் விசாரித்து தக்க நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும் “என்றார் மான்யா .
தனுஷ் பெயரை வைத்து யாரோ இப்படி செய்கிறார்கள் என்றால் அது பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டியது அப்படி யாரையும் நம்பாதீர்கள். அப்படி பேசுபவரின் போன் நம்பர்களை வெளிப்படுத்துங்கள் என்று சொல்ல வேண்டியது தனுஷ் மற்றும் அவரது நலம் விரும்பிகளின் கடமை.
அதெல்லாம் தனுஷ் கண்டிப்பாக செய்வார்.
- ராஜ திருமகன்
