தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் ராஜ்மோகன் மீது நான்கு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23 ம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குபதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் எடப்பாடி தொகுதியை தவிர மீதமுள்ள 233 தொகுதிகளில் களம் காண்கிறது. பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் நடிகர் விஜய் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். எழும்பூர் தொகுதியில் ராஜ்மோகன் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் சூளை அங்காளம்மன் கோயிலில் அமர்ந்து இந்து அறநிலையத்துறை மற்றும் முன்னாள் மக்கள் பிரதிநிதி குறித்து அவதூறாகப் பேசி, அதை வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து சூளை அங்காளம்மன் கோயில் செயல் அலுவலர் கங்காதேவி கொடுத்த புகாரின் அடிப்படையில், எழும்பூர் தொகுதி தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் ராஜ்மோகன், பகுதி செயலாளர் நந்தா மற்றும் யூடியூப் ஆர் பீலிக்ஸ் ஜெரால்ட் ஆகிய மூன்று பேர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அத்துமீறி நுழைதல், ஆபாசமாகப் பேசுதல், மத உணர்வுகளைப் புண்படுத்துதல் மற்றும் சட்டவிரோதமாகக் கூட்டம் நடத்துதல் ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறையினர் இவர்கள் மீது விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
