நடிகரும் தவெக தலைவருமான விஜய்யின் கடைசி படம் என அறிவிக்கப்பட்ட ஜனநாயகன் திரைப்படம் சென்சார் பிரச்சனையில் சிக்கியதால் திட்டமிட்டபடி ஜனவரி 9ம் தேதி வெளியாகவில்லை. தேர்தல் முடிவடைந்த பின்னர் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த படம் முழுவதும் இணையத்தில் சட்டவிரோதமாக வெளியானது. இச்சம்பவம் படக்குழுவினர் மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த தமிழ் திரை உலகினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. சட்ட விரோதமாக இணையத்தில் படம் வெளியாகி உள்ளதற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “திரையரங்கின் இருள் அகன்று திரை திறக்காத முன்பே, ‘ஜனநாயகன்‘ என்ற படைப்பின் உயிரை பறித்து, அதை கள்ளத்தனமாக சமூக வலைத்தளங்களில் அறுத்தெறிந்து, அதன் வருங்காலத்தை காரிருளில் மூழ்கடித்த இந்த ஈனச் செயல், ஒரு சாதாரண சட்ட விதி மீறல் அல்ல… காலங்காலமாக மக்களை மகிழ்விக்கும் கலைக்கு எதிரான திட்டமிட்ட ஒரு வன்முறை.
அந்த வன்முறை தான் ‘ஜனநாயகம்’ என்னும் இரையை விழுங்கியது. இது, கலையை மட்டுமே நம்பி வாழும் தொழிலாளர்களின் உழைப்புக்கு எதிரான கொடூர யுத்தம்… மனித மனச்சாட்சிக்கு எதிரான ஒரு நம்பிக்கை துரோகம். ஏனெனில் ஒரு திரைப்படம் என்பது சில மணித்துளிகள் கண்முன் ஓடும் கற்பனை கதையல்ல… அது ஆயிரம் கனவுகளின் கூட்டுத்தொகை.
ஒவ்வொரு காட்சியின் பின்னணியிலும் வியர்வை, உழைப்பு, பல குடும்பங்களின் வாழ்வாதாரம், ஒரு சமுதாயத்தின் உணர்வு அனைத்தும் பின்னிப் பிணைந்திருக்கின்றன. அதனால் திரைத்துறை என்பது வெறும் பொழுதுபோக்கு தொழில் அல்ல… அதை நம்பி வாழும் பல்லாயிரக்கணக்கானோரின் வாழ்க்கை வழியும், சிந்தனைகளை விதைத்து சமூக மாற்றங்களை உருவாக்கும் வலிமைமிக்க தளமும் ஆகும்.
அத்தகைய துறையை சுயலாபம், காழ்ப்புணர்ச்சி அல்லது பழிவாங்கும் மனநிலையால் களங்கப்படுத்த முயல்பவர்கள், சட்டத்தையும், சமூக நெறிகளையும் மீறுபவர்கள். இச்செயலை ஆற்றியவர்கள் எவராக இருப்பினும், அவர்களது அடையாளம் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட வேண்டும். சட்டம் அவர்களைத் தொட வேண்டும். நீதித்துறையின் தண்டனை அவர்களைத் தாக்க வேண்டும். அது ஒரு எடுத்துக்காட்டாக நிலைத்திருக்க வேண்டும்.
ஏனெனில் இது ஒரே ஒரு திரைப்படம் சார்ந்த குறை கூறல் அல்ல; இது ஒரு ஒட்டுமொத்த துறையின் மாண்புக்கே விடப்படும் அறைகூவல். இன்று “ஜனநாயகன்”… நாளை இன்னொரு படைப்பு… இப்படி ஒவ்வொரு முயற்சியும், உழைப்பும், முதலீடும், நம்பிக்கையும் களவாடப்பட்டால், இன்று கதை சொல்பவர்களே நாளை சோகக் கதையாக மாறிவிடுவர்.
இந்த சூழ்நிலையில், திரைத்துறையும் பொதுமக்களும் ஒன்றிணைந்து இப்படியான கசிவு மற்றும் திருட்டு போன்ற தவறான செயல்களைத் தடுப்பது காலத்தின் தேவையாகிறது. இது கலைக்கும், உழைப்புக்கும் நாம் தரும் அடிப்படை மரியாதையாகும். அதேபோல், திரைத்துறையைச் சேர்ந்த அனைத்து அமைப்புகளும், கலைஞர்களும், தொழிலாளர்களும் இணைந்து இத்தகைய செயல்களுக்கு எதிராக உறுதியான நிலைப்பாட்டை எடுத்துக்கொள்ள வேண்டுகிறோம்.
இந்த முயற்சியில் தென்னிந்திய நடிகர் சங்கம் முழுமையான ஒத்துழைப்புடன் இணைந்து செயல்படும் என்பதை உறுதியாக தெரிவித்துக்கொள்கிறோம். இது ஒரு அறிக்கை மட்டும் அல்ல… ஒரு அழைப்பு. உணர்வுள்ள அனைவரும் “கலைக்காக, கலை காக்க, ஒன்றிணைந்து முன் வாருங்கள்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
