வில்லிவாக்கம் தொகுதியில் இன்று (ஏப்ரல் 7) தவெக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனாவின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 23ம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 4, 2026 அன்று நடைபெறும்.
இந்நிலையில் நேற்று (ஏப்ரல் 6) வேட்புமனு தாக்கல் முடிவடைந்த நிலையில், இன்று (ஏப்ரல் 7) 234 தொகுதிகளிலும் வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெற்று வருகிறது. சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் ஆதவ் அர்ஜுனா தாக்கல் செய்த வேட்பு மனு மீது இன்று பரிசீலனை நடைபெற்றது.
அப்போது, சுயேச்சை வேட்பாளர்களான தேவராஜன், முரளி, வினோத் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆதவ் அர்ஜுனா தனது பிரமாணப் பத்திரத்தில் மனைவியின் பெயரில் உள்ள 35 நிறுவனங்களை குறிப்பிடவில்லை என்றும், வருமான வரி கணக்கில் காட்டப்படாத ரூ.1 கோடி இருப்பு உள்ளதாகவும், வைப்பு நிதியில் உள்ள ரூ.2 கோடிக்கு ரூ.84 லட்சம் வட்டி வருவாயை மறைத்துள்ளதாகவும், 14 கோடி வருமானத்தை மறைத்துள்ளதாகவும், 1.69 கோடி ரொக்கப் பணம் வைத்துள்ளதாகவும் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
இந்த எதிர்ப்புகளைத் தொடர்ந்து, தேர்தல் கண்காணிப்பாளர் விக்ரம் குமார் சிங் வரும் வரை காத்திருக்குமாறு தேர்தல் அதிகாரி ஆதவ் அர்ஜுனாவின் வேட்பு மனுவை தற்காலிகமாக நிறுத்தி வைத்தார். பின்னர், மீண்டும் நடைபெற்ற பரிசீலனையில், வேட்பு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் சரியாக இருப்பதாக தேர்தல் அதிகாரி கூறி ஆதவ் அர்ஜுனாவின் வேட்பு மனு ஏற்கப்பட்டது.
