ஆதவ் அர்ஜூனா வேட்புமனு நிறுத்திவைப்பு – ஏற்பு : இடையில் நடந்தது என்ன?

Published On:

| By Kavi

ஆதவ் அர்ஜுனா மீது வில்லிவாக்கம் சுயேச்சை வேட்பாளர் தேவராஜன் புகார் அளித்துள்ளார். 

தமிழக வெற்றி கழக தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா 2026 சட்டமன்ற தேர்தலில் வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடுகிறார். 

ADVERTISEMENT

இதையொட்டி அவர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்த நிலையில்,  இன்று காலை நடந்த பரிசீலனை முடிவில் ஆதவ் அர்ஜுனாவின் வேட்பு மனு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

அந்த தொகுதியில் சுயேட்சையாக களமிறங்கிய ஜி தேவராஜன் வில்லிவாக்கம் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்திருந்தார். 

ADVERTISEMENT

அதில், “தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளரான ஆதவ் அர்ஜுனாவின் வேட்பு மனுவுக்கு எதிராக மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 இன் பிரிவு.36(2)ன் கீழ்
வேட்பு மனு பரிசீலனையின் போது தான் எழுப்பிய வாய்மொழி ஆட்சேபனைகளின் தொடர்ச்சியாக எழுத்துப்பூர்வமான ஆட்சேபனைகளை அளிக்கிறேன்.

ஆதவ் அர்ஜுனா, தனது வேட்புமனுப் படிவங்களில் தகவல்களை வெளியிடாமலும், மறைத்தும் உள்ளதை எனது ஆட்சேபனைகள் மூலம் தங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.

ADVERTISEMENT

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-இன் பிரிவு 33 A மற்றும் B-இன் படி, ஒரு வேட்பாளர் தனது குற்றப் பின்னணிகள், சொத்துக்கள் மற்றும் கடன்கள், மற்றும் அவரது துணைவியார் தொடர்பான முழுமையான, சரியான மற்றும் உண்மையான தகவல்களை வெளிப்படுத்துவது அவரது கடமையாகும்.

ஆனால், ஆதவ் அர்ஜுனா, முக்கியத் தகவல்களை மறைத்துள்ளார். அதனை உங்கள் கவனத்திற்கு கொண்டு வந்து தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

ஆதவ் அர்ஜுனாவின் மனைவியான டெய்சி ஆதவ் அர்ஜுனா இயக்குநராக இருக்கும் நிறுவன பங்குகள் அவருடைய தனிப்பட்ட சொத்துக்கள் ஆகும். ஆனால் அவை இன்னும் வெளியிடப்படவில்லை

ஆதவ் அர்ஜுனா தனது தேர்தல் வேட்புமனுப் படிவத்தின் 26-ஆம் படிவத்தில் வெளிப்படுத்தியிருப்பது, முக்கியத் தகவல்களை மறைத்தல் மற்றும் வேண்டுமென்றே வெளியிடாமல் இருத்தல் ஆகும். எனவே, தமிழக வெற்றி கழகத்தால் நிறுத்தப்பட்ட வேட்பாளரான ஆதவ் அர்ஜுனாவின் வேட்புமனு நிராகரிக்கப்பட வேண்டும்..

மார்ட்டின் பிராப்பர்ட்டி டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட்,
மார்ட்டின் டவுன்ஷிப் டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட்,
மார்ட்டின் எலைட் புரோமோட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட்,
மார்ட்டின் டுவெல்லர்ஸ் பிரைவேட் லிமிடெட்,
மார்ட்டின் ஹை-டெக் கன்ஸ்ட்ரக்ஷன்,
உள்ளிட்ட 14 நிறுவனங்களின் பட்டியலை அளித்துள்ளார்.

மேலும், மேற்கூறிய நிறுவனங்களின் பல சொத்துக்கள், PMLA சட்டத்தின் விதிகளின் கீழ் அமலாக்க இயக்குநரகத்தால் (ED) முடக்கப்பட்டுள்ளன.

உதாரணமாக, டாமினன்ட் டவர்ஸ் அண்ட் டிரேடர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்திற்குச் சொந்தமான சுமார் 123 கோடி ரூபாய் மதிப்புள்ள நிறுவனச் சொத்துக்களும், 22 கோடி ரூபாய் மதிப்புள்ள பரஸ்பர நிதிகளும் அமலாக்கத்துறையின் முடக்கத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

அதேபோல், மார்ட்டின் ரியல் எஸ்டேட் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்திற்குச் சொந்தமான சுமார் 17.7 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் அமலாக்க இயக்குநரகத்தின் (ED) முடக்கத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

மேற்கூறிய உண்மைகள் அனைத்தையும் வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா தனது தேர்தல் வேட்புமனுப் படிவங்களில் வேண்டுமென்றே மற்றும் உள்நோக்கத்துடன் மறைத்துள்ளார். எனவே, அவரது வேட்புமனு நிராகரிக்கப்படத் தகுதியானது என தெரிவித்திருந்தார்.

இந்த புகாரால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆதவ் அர்ஜுனாவின் வேட்புமனு மறு பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share