“மத்திய அரசு வேலை, அதுவும் கெத்தான உளவுத்துறையில் (Intelligence Bureau) வேலை பார்க்க வேண்டும்” என்ற கனவு பல இளைஞர்களுக்கு இருக்கும். ஆனால், “அதற்குப் பெரிய படிப்பு வேண்டுமே?” என்று பலர் தயங்கி நிற்பார்கள். அந்தக் கவலையே வேண்டாம். வெறும் பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கும் உளவுத்துறையில் வேலைவாய்ப்பை வாரி வழங்கியுள்ளது மத்திய உள்துறை அமைச்சகம்.
மத்திய உளவுத்துறையில் (IB) காலியாக உள்ள ‘மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப்’ (MTS) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காலியிடங்கள் எவ்வளவு?
நாடு முழுவதும் உள்ள உளவுத்துறை அலுவலகங்களில் மொத்தம் 362 எம்டிஎஸ் (MTS – General) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் சென்னை மண்டலத்திலும் கணிசமான இடங்கள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கல்வித் தகுதி என்ன?
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க, அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் 10ஆம் வகுப்பு (Matriculation) தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும். வேறு எந்த முன் அனுபவமும் தேவையில்லை.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 25 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும். (எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு).
சம்பளம் எவ்வளவு?
மத்திய அரசுப் பணி என்பதால் சம்பளம் மற்றும் சலுகைகளுக்குப் பஞ்சமிருக்காது.
- ஊதியம்: லெவல்-1 படி, மாதம் ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை அடிப்படை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- ஸ்பெஷல் அலவன்ஸ்: இது உளவுத்துறை பணி என்பதால், அடிப்படைச் சம்பளத்தில் 20% சிறப்புப் பாதுகாப்புப் படி (Special Security Allowance) கூடுதலாகக் கிடைக்கும். இதுபோக டிஏ (DA), வீட்டு வாடகைப்படி என எல்லாவற்றையும் சேர்த்தால், கையில் நல்ல சம்பளம் கிடைக்கும்.
தேர்வு முறை:
விண்ணப்பதாரர்கள் இரண்டு கட்டங்களாகத் தேர்வு செய்யப்படுவார்கள்:
- Tier-1: ஆன்லைன் எழுத்துத் தேர்வு (100 மதிப்பெண்கள்). இதில் பொது அறிவு, கணிதம், ரீசனிங் மற்றும் ஆங்கிலம் ஆகிய பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.
- Tier-2: இது ஒரு தகுதித் தேர்வு. ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்த்தல் மற்றும் எளிய பத்தி எழுதுதல் போன்றவை இருக்கும்.
விண்ணப்பிப்பது எப்படி?
விருப்பமுள்ளவர்கள் மத்திய உள்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.mha.gov.in அல்லது www.ncs.gov.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
கடைசி தேதி:
விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கக் கடைசி நாள்: 14.12.2025. (இரவு 11.59 மணிக்குள்).
10ஆம் வகுப்புத் தகுதியில் ஒரு கெத்தான மத்திய அரசு வேலை கிடைப்பது அரிது. கடைசித் தேதி நெருங்கிவிட்டதால், ஆர்வமுள்ளவர்கள் இன்றே விண்ணப்பித்து விடுங்கள்!
