8வது ஊதியக் குழுவின் அமலாக்கத்தை எதிர்நோக்கியுள்ள மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும், தற்போது அகவிலைப்படி (DA – Dearness Allowance) மீது தங்கள் கவனத்தைச் செலுத்தி வருகின்றனர். அனைத்து ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் 2026ஆம் ஆண்டின் முதல் பாதிக்கான அகவிலைப்படி உயர்வை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அகவிலைப்படி உயர்வு ஏப்ரல் முதல் வாரத்தில் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வழக்கமாக, அகவிலைப்படி ஹோலி பண்டிகையை ஒட்டி திருத்தி அமைக்கப்படும். இருப்பினும், இந்த ஆண்டு மார்ச் முதல் வாரத்திலேயே பண்டிகை வந்ததால், தேவையான அறிக்கையை உரிய நேரத்தில் இறுதி செய்ய அரசால் முடியவில்லை. இதன் விளைவாக அகவிலைப்படி உயர்வு ஏப்ரல் முதல் வாரத்தில் அமல்படுத்தப்படும் என தற்போது எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், அகவிலைப்படி உயர்வுக்கான அதிகாரப்பூர்வ தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
அகவிலைப்படி தாமதத்திற்கான காரணம்:
அகவிலைப்படி உயர்வில் ஏற்படும் தாமதம் குறித்த கேள்விகள் தற்போது அனைத்து மத்திய அரசு ஊழியர்களின் மனதிலும் எழுந்துள்ளன. நிபுணர்களின் கூற்றுப்படி, 8வது ஊதியக் குழுவின் அமலாக்கக் கட்டமைப்பு தொடர்பான நிர்வாகச் சிக்கல்களே இந்த ஆண்டுக்கான அகவிலைப்படி திருத்தத்தில் ஏற்பட்ட தாமதத்திற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
வழக்கமாக, இதுபோன்ற அறிவிப்புகள் மார்ச் மாதத்திற்குள் இறுதி செய்யப்படும். இருப்பினும், இந்த முறை நிதிச் சமநிலையைப் பேணுவதற்காக தொழில்துறைத் தொழிலாளர்களுக்கான சமீபத்திய நுகர்வோர் விலைக் குறியீட்டு (CPI) தரவுகளின் அடிப்படையில் அரசாங்கம் பேமெண்ட் தொகையை நிர்ணயிப்பதாகத் தெரிகிறது. இந்தத் தாமதத்திற்கு இதுவே முதன்மைக் காரணமாகக் கருதப்படுகிறது.
அறிவிப்பு எப்போது வெளியிடப்படும்?
முன்னதாக மத்திய அரசு மார்ச் 28, 2025 அன்று அகவிலைப்படி உயர்வை அறிவித்தது. இந்த முன்னுதாரணத்தைக் கருத்தில் கொண்டு, 2026 ஏப்ரல் முதல் வாரத்தில் அரசாங்கம் இந்த உயர்வை அறிவிக்க அதிக வாய்ப்புள்ளது. ஆனால் இப்போது எவ்வளவு உயர்வை எதிர்பார்க்கலாம் 2 சதவீதமா அல்லது 3 சதவீதமா என்ற கேள்வி அரசு ஊழியர்கள் மத்தியில் உள்ளது.
8வது ஊதியக் குழு எப்போது செயல்படுத்தப்படும்?
8வது ஊதியக் குழுவிற்கான ஆய்வறிக்கை தற்போது தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆணையத்திற்காக அமைக்கப்பட்ட குழு, 2027ஆம் ஆண்டின் நடுப்பகுதிக்குள் ஆய்வறிக்கையை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து அரசாங்கம் அதைச் செயல்படுத்தும். இது மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளத்தில் கணிசமான உயர்வுக்கு வழிவகுக்கும். அதிகரித்து வரும் பணவீக்கத்தின் இந்தக் காலகட்டத்தில் இது ஒரு வரப்பிரசாதமாகவே அமையும்.
