“தவறு செய்தால் காப்பாற்றமாட்டோம்”: அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர்!

Published On:

| By Kalai

தவறு செய்யும் காவல்துறை அதிகாரிகளை காப்பாற்ற மாட்டோம், நேர்மையான அதிகாரிகளுக்கு துணைநிற்க தவறமாட்டோம் என்று அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா தெரிவித்துள்ளார்.

ஓய்வு பெறும் காவல்துறை அதிகாரிகளுக்கு, காவல்துறை சார்பில் வழியனுப்பு விழா நடைபெறுவது வழக்கம்.

அதிலும் நீதிமன்றங்களுக்கும், அரசு குற்றவியல் வழக்கறிஞர்களுக்கும், வழக்குகளை விரைந்து விசாரிக்க உதவிய காவல்துறை அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்து வழியனுப்பும் நிகழ்ச்சி, அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் தலைமையில் நடத்தப்படுகிறது.

அதன்படி ஓய்வு பெற உள்ள சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணனுக்கு, அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா தலைமையில் வழியனுப்பு விழா இன்று(நவம்பர் 26) நடைபெற்றது. இதில் டிஜிபி சைலேந்திரபாபு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

விழாவிற்கு தலைமை தாங்கிய அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா,  சிறப்பாக பணியாற்றிய கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணனுக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.

மேலும் குற்றவியல் வழக்கறிஞர்கள், காவல்துறை தரப்பு,குற்றவாளி தரப்பு என நீதிமன்றத்தின் முன்பு அனைவருக்கும் பொதுவானவர்கள் என தெரிவித்தார்.

தவறு செய்யும் காவல்துறை அதிகாரிகளை நீதிமன்றத்தின் முன் நாங்கள் காப்பாற்ற மாட்டோம், அதே வேளையில் நேர்மையான அதிகாரிகளுக்கு துணையாக இருப்போம் என்று அவர் கூறினார்.  

கோவை குண்டுவெடிப்பு வழக்கு விசாரணையை சிறப்பாக நடத்தியவர், குடியரசு தலைவர் விருது பெற்ற தாமரைக்கண்ணன், வீரப்பன் தேடுதல் வேட்டையில் மிகப்பெரிய அளவில் உதவியதாக டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டி பேசினார்.

கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் பேசுகையில் , காவல்துறையினருக்கு நீதிமன்றங்களின் முக்கியத்துவம் தெரிவதில்லை என்றும்,வழக்குப்பதிவு செய்தாலே பணி முடிந்துவிட்டதாக கருதுவதாகவும் தெரிவித்தார்.

கலை.ரா

“இனி யாரையும் இழக்கக்கூடாது”: முதல்வர் வேண்டுகோள்!

டெல்லி போலீசுக்கு ரூ.5.5 கோடி பரிசு வழங்கும் ஆஸ்திரேலியா அரசு?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share