துக்க நிகழ்வைக் கண்டு சிரிப்பு வருமா?
நம்மைச் சுற்றியுள்ள மனிதர்கள் எத்தனை வித்தியாசமானவர்களாகத் திகழ்கின்றனர். அவர்களது வாழ்க்கை எத்தனை வேறுபட்டதாக உள்ளது. அவற்றின் ஊடே எத்தனை எத்தனை திரைப்படங்களுக்கான கதைகள் ஒளிந்து கிடக்கின்றன. அவற்றைக் கண்டடைகிற வேலையில் மலையாள இயக்குனர்கள், எழுத்தாளர்கள் முழுமூச்சாக இறங்கிவிட்டார்களோ என்றெண்ண வைக்கின்றன அங்கிருந்து வரும் சில திரைப்படங்கள்.
வழக்கமான திரைக்கதை குறைகள், தவறுகளைக் களைந்துவிட்டு ‘தனித்துவமான’ கதை சொல்லலைக் கொண்டிருக்கிற அப்படங்கள் ரசிகர்களுக்குத் தருகிற உள்ளக் கிளர்ச்சியை அனுபவிக்கிறபோது, மீண்டுமொரு முறை அதனை அடைய வேண்டுமென்கிற துடிப்பு தானாகப் பிறக்கிறது.
அதற்குச் சமீபத்திய உதாரணம் ஆகியிருக்கிறது எஸ்.விபின் எழுதி இயக்கியிருக்கிற ‘வியாசன சமேதம் பந்து மித்ராதிகள்’. Vysanasametham Bandhumithradhikal review june 25
’ஜெய ஜெய ஜெய ஹே’, ‘குருவாயூர் அம்பலநடையில்’ இயக்குனரும் ‘வாழா’ படத்தின் தயாரிப்பாளருமான விபின் இதனைத் தயாரித்திருக்கிறார்.
அனஸ்வரா ராஜன், அஸீஸ் நெடுமங்காடு, சிஜு சன்னி, ஜோமோன் ஜோதிர், பைஜு சந்தோஷ், மல்லிகா சுகுமாரன் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் டைட்டிலுக்கு ‘சோகத்துடன் குடும்பத்தினர், நண்பர்கள்’ என்று அர்த்தம். இறப்பு குறித்த அறிவிப்பு சுவரொட்டிகள், தினசரிகளில் வருகிற அஞ்சலிக் குறிப்புகளில் இடம்பெறுகிற வார்த்தைகள் அவை.
அதனைத் தாங்கி நிற்கிற ஒரு திரைப்படம் சிரிக்கச் சிரிக்கத் திரையனுபவம் தருவது ஒரு முரண். அதனை எப்படிச் சாத்தியப்படுத்தியிருக்கிறது இப்படம்?

துக்க வீட்டில் நகைச்சுவை!
சட்டென்று ஒரு காலைப் பொழுதில் முதிய பெண்மணி சாவித்திரிக்கு (மல்லிகா சுகுமாரன்) மாரடைப்பு ஏற்படுகிறது. மருமகன் முரளி (அஸீஸ் நெடுமங்காடு) அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார். அங்கு, அவரது உயிர் பிரிகிறது.
வயது மூப்படைந்தவர்கள் மரணிப்பது இயல்பு. ஆனால், அந்த வீட்டைப் பொறுத்தவரை அது மிகப்பெரிய துக்கமாக மாறுகிறது.
காரணம், அதற்கடுத்த வாரம் சாவித்திரியின் பேத்தி அஞ்சலியின் (அனஸ்வரா ராஜன்) நிச்சயதார்த்தத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
சாவித்திரியின் மரணம் மூத்த மகள் சுதாவையும் (அஸ்வதி சாந்த் கிஷோர்) மருமகன் முரளியையும் கவலைக்கு உள்ளாக்குகிறது.
இந்த நிலையில், அஞ்சலியை ஒருதலையாகக் காதலிக்கிற சுஹைல் (சிஜு சன்னி), அவரது நண்பர் சக்தியை (ஜோமோன் ஜோதிர்) அழைத்துக்கொண்டு அந்த துக்க வீட்டிற்கு வருகிறார்.
யார் என்று தெரியாமல், அங்கிருக்கும் சிலர் அவர்களை வேலை வாங்கத் தொடங்குகின்றனர். அதனைக் கண்டு கூடுதலாக அதிர்ச்சியடைகிறார் அஞ்சலி.
துக்க வீட்டில் களேபரம் நிகழ்கிற வகையில் சிலர் நடந்துகொள்கின்றனர். அவர்கள் அனைவருமே உறவுகளாக, நட்புகளாக, ஊரில் பழக்கமானவர்களாக இருப்பதால் முரளியால் ஒன்றுமே செய்ய முடிவதில்லை.
ஒருகட்டத்தில், அன்றைய தினம் சாவித்திரியின் இறுதிச்சடங்கு நிகழுமா என்கிற அளவுக்கு நிலைமையை அவர்கள் மோசமாக்குகின்றனர். அதன்பிறகு என்னவானது என்பதை ‘சீரியசாக’ அல்லாமல் சிரிக்கச் சிரிக்கச் சொல்கிறது ‘வியாசன சமேதம் பந்து மித்ராதிகள்’.
துக்க வீட்டில் நிகழ்கிற நகைச்சுவை என்பது புதிதல்ல என்றாலும், ‘இதையெல்லாம் நகைச்சுவை ஆக்க முடியுமா’ என்கிற விஷயங்களையும் தொட்டிருப்பதே இப்படத்தின் யுஎஸ்பி.

சிறப்பான ஆக்கம்!
இந்த படத்தின் ஆகப்பெரிய சிறப்பு. மிகச்சில பிரேம்களில் தலை காட்டியவர்கள் கூடப் பொருத்தமான நடிப்பை வழங்கியிருப்பதுதான்.
துக்கத்தோடு நேரடியாகச் சம்பந்தப்பட்டப்பட்டவர்களின் இருப்புக்கும் அதனை விசாரிக்க வந்த உறவினர்கள், நண்பர்கள், ஊர்காரர்களின் உடல்மொழிக்கும் பாவனைகளுக்கும் நிறையவே வித்தியாசம் இருக்கும். அதனை மிகச்சரியாகப் பிரதிபலித்திருக்கிறது ‘வியாசன சமேதம் பந்து மித்ராதிகள்’.
அந்த வகையில் அனஸ்வரா ராஜன், அஸீஸ் நெடுமங்காடு, அஸ்வதி சாந்த் கிஷோர் மற்றும் பைஜு சந்தோஷ், சிஜு சன்னி, ஜோமோன் நோதிர் என ஒவ்வொருவரது நடிப்பும் ஒவ்வொரு ரகம்.
போலவே, கதை நிகழ்கிற களத்திற்கே சென்று வந்த உணர்வை ஏற்படுத்துகிறது ஒளிப்பதிவாளர் ரஹீம் அபுபக்கர், படத்தொகுப்பாளர் ஜான் குட்டி, கலை இயக்குனர் பாபு பிள்ளை, ஒலி வடிவமைப்பாளர் அருண் மணி, ஒப்பனையாளர் சுதி சுரேந்திரன் உள்ளிட்ட பல தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு.
அங்கீத் மேனனின் இசையில் பாடல்கள் ஏற்படுத்துகிற உணர்வு ஒரு வகை என்றால், பின்னணி இசை ஊட்டுகிற தாக்கம் வேறொரு ரகம்.
துக்க வீட்டின் அருகே ஒரு இளம் இசைக்குழு பேண்ட் வாத்தியங்கள் இசைப்பது, அந்த நிகழ்வை மையமாக வைத்து பிழைப்பு நடத்துபவர்கள் தங்களது போட்டி பொறாமையை வெளிப்படுத்துவது, அங்கு வருகிற பெண்மணிகள், ஆண்கள் தங்களது இயல்பை வெளிப்படுத்திச் சில களேபரங்களை நிகழ்த்துவது என்று ஒவ்வொரு காட்சியையும் செறிவானதாக மாற்றியிருக்கிறார் இயக்குனர் எஸ்.விபின்.
அவரது எழுத்தாக்கம் மிகச்சிறப்பாக அமைந்திருப்பதால், இதர விஷயங்களும் அதோடு பொருந்தி நிற்கின்றன. இயக்குனரின் ஆக்கம் மிகச்சிறப்பாக அமைந்திருப்பதால், இதிலிருக்கிற குறைகளைக் கண்கள் தேடுவது இல்லை.
முக்கியமாக, ‘துக்க நிகழ்வைக் கண்டு சிரிப்பு வருமா’ என்கிற கேள்விக்குச் சிறப்பாகப் பதிலளித்திருக்கிறார் விபின்.
தமிழ் சினிமாவில் சமீபகாலமாகச் சில படங்கள் தவறவிடுவது இந்த சிறப்பான ஆக்கத்தைத் தான். அந்த உயரத்தை எட்ட முடியாமல் போவதுதான் இங்கிருக்கிற ரசிகர்களைச் சோகத்தில் ஆழ்த்தி வருகிறது.
அதனைத் தவிர்க்க வேண்டுமானால், ஒவ்வொரு வாரமும் ஓரிரு படங்கள் மிகச்சிறப்பானதாக அமையும் என்கிற நம்பிக்கையை ரசிகர்களிடத்தில் உருவாக்க வேண்டுமானால், இது போன்ற படைப்புகளின் ‘ப்ளஸ்’களை, துருத்தாமல் மறைந்து கொண்டிருக்கிற ‘மைனஸ்’களின் மீது நம்மவர்கள் கவனம் செலுத்த வேண்டும். தமது படங்களும் அவ்வாறு அமையத்தக்க வகையில் உழைப்பைக் கொட்ட வேண்டும்..
அப்படிச் சொல்வதற்கான ஒரு சமீபத்திய உதாரணமாக அமைந்திருக்கிறது ‘வியாசன சமேதம் பந்து மித்ராதிகள்’.