நடிகரும் தவெக தலைவருமான விஜய் காரைக்குடியில் திடீரென சைக்கில் ஓட்டி கூட்டத்தில் சிக்கி கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விஜய் இன்று (ஏப்ரல் 10) சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார். முன்னதாக, இன்று காலை அவர் மதுரையிலிருந்து பிரச்சார வாகனம் மூலம் சாலை மார்க்கமாக காரைக்குடி நோக்கி சென்று கொண்டிருந்தார். அவரது பிரச்சார வாகனத்தை வழக்கம்போல் தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் பைக்கில் பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்தனர். மதுரை தேசிய நெடுஞ்சாலையில் விஜயின் வாகனம் சென்றபோது, அதைப் பின்தொடர்ந்து சென்ற இரு இளைஞர்களின் பைக் சாலைத் தடுப்புச் சுவரில் மோதி விபத்தில் சிக்கியது. இதில் அந்த இளைஞர்கள் படுகாயம் அடைந்தனர்.
இந்நிலையில், விஜய் காரைக்குடியில் திறந்த வேனில் ரோடு ஷோ செய்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். திடீரென விஜய் வாகனத்தை விட்டு இறங்கி சைக்கிளில் செல்லத் தொடங்கினார். விஜய் சைக்கிளில் செல்ல முன் அனுமதியும் பெறாத நிலையில், அங்கிருந்த கூட்டத்தில் சிக்கிக் கொண்டார்.
ஏற்கனவே விஜய் கூட்டம் நடைபெறும் இடத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் சுமார் 6 மணி நேரத்திற்கு மேலாகக் காத்திருந்த நிலையில், விஜயின் இந்தத் திடீர் சைக்கிள் பயணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கரூர் வேலுச்சாமி புரத்தில் நடந்த பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில் இன்று விஜய் முன் அனுமதி பெறாமல் சைக்கிளில் சென்று கூட்டத்தில் சிக்கி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
