2025-ம் ஆண்டு பங்குச்சந்தை மற்றும் கமாடிட்டி சந்தையில் (Commodity Market) மிகப்பெரிய ஆச்சரியம் எதுவென்றால், அது வெள்ளியின் அசுர வளர்ச்சிதான். பொதுவாகத் தங்கத்தின் நிழலிலேயே இருக்கும் வெள்ளி, இந்த முறை தங்கத்தையே மிஞ்சும் அளவிற்கு லாபத்தைக் கொடுத்துள்ளது. இது குறித்து வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் கூறியுள்ள கருத்துக்கள் முதலீட்டாளர்களைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளன.
“வெள்ளி கதை இப்பதான் ஆரம்பம்…” சமீபத்தில் சமூக வலைத்தளமான எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள அனில் அகர்வால், “வெள்ளி அதன் ‘தங்க நிழலில்’ இருந்து வெளியேறிவிட்டது. இது ஒரு நீண்ட கால வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பியுள்ளது,” என்று குறிப்பிட்டுள்ளார். அவரது கணிப்புப்படி, வெள்ளியின் இந்த ஏற்றம் வெறும் ஆரம்பம்தான்.
தங்கம் vs வெள்ளி – ஒரு ஒப்பீடு: அவர் சொல்வதற்கு வலுவான காரணங்களும் உள்ளன. 2025-ம் ஆண்டில் மட்டும் வெள்ளியின் மதிப்பு டாலர் மதிப்பில் 125% உயர்ந்துள்ளது. அதே சமயம், தங்கம் 63% மட்டுமே உயர்ந்துள்ளது. அதாவது, தங்கத்தை விட இரண்டு மடங்கு வேகத்தில் வெள்ளி வளர்ந்துள்ளது.
ஏன் இந்தத் திடீர் மவுசு?
வெள்ளி என்பது வெறும் ஆபரண உலோகம் மட்டுமல்ல; அது ஒரு தொழில்முறை உலோகம் (Functional Metal). “சூரிய சக்தி தகடுகள் (Solar Cells), பாதுகாப்புத் துறை (Defence) மற்றும் நவீன தொழில்நுட்பங்களில் வெள்ளியின் பயன்பாடு இன்றியமையாதது. உள்ளீட்டு மதிப்பும் (Intrinsic Value), தொழில்முறைத் தேவையும் கொண்ட ஒரே உலோகம் வெள்ளிதான்,” என்கிறார் அகர்வால்.
வேதாந்தாவிற்கு அடித்த ஜாக்பாட்: இந்தியாவின் ஒரே வெள்ளி உற்பத்தியாளரான வேதாந்தாவின் துணை நிறுவனமான ‘இந்துஸ்தான் ஜிங்க்’ (Hindustan Zinc), இந்த விலை ஏற்றத்தால் பெரும் லாபம் கண்டுள்ளது. செப்டம்பர் 2025 காலாண்டில், அந்த நிறுவனத்தின் மொத்த லாபத்தில் சுமார் 40% (ரூ.1,060 கோடி) வெள்ளியின் மூலம் மட்டுமே கிடைத்துள்ளது.
வேதாந்தா பிரிப்பு மற்றும் டிவிடெண்ட்: இதற்கிடையில், வேதாந்தா நிறுவனம் ஐந்து தனித்தனி நிறுவனங்களாகப் பிரிய உள்ளது. இது குறித்துப் பேசிய அகர்வால், “டிவிடெண்ட் (பங்கு ஈவுத்தொகை) கொடுப்பது என் ரத்தத்திலேயே ஊறிய ஒன்று. நிறுவனம் பிரிந்தாலும் பங்குதாரர்களுக்குத் தொடர்ந்து டிவிடெண்ட் கிடைக்கும்,” என்று உறுதி அளித்துள்ளார். 2026 மார்ச் மாதத்திற்குள் இந்த மறுசீரமைப்புப் பணிகள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விலை ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், தொழில்நுட்ப வளர்ச்சி இருக்கும் வரை வெள்ளியின் மவுசு குறையாது என்பதே நிபுணர்களின் கருத்தாக உள்ளது. எனவே, நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு வெள்ளி ஒரு சிறந்த தேர்வாக இருக்கலாம்!
