தமிழக வெற்றிக் கழகத்தில் தீவிரமாக செயல்பட்டு வந்த தூத்துக்குடியைச் சேர்ந்த அஜிதா ஆக்னல் இன்று (ஏப்ரல் 12) திமுகவில் இணைந்தார்.
கடந்த 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் தேதி தவெக மாவட்ட செயலாளர் நியமனம் நடைபெற்றது. அப்போது தனக்கு தூத்துக்குடியில் மத்திய மாவட்ட செயலாளர்கள் பதவி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த அஜித்தா சென்னை பனையூர் அலுவலகத்திற்கு சென்றிருந்தார். ஆனால் மாவட்ட செயலாளர் பதவிக்கான பட்டியலில் தனது பெயர் இல்லை என்பதை அறிந்த அஜிதா விஜயை நேரில் சந்திக்க முயற்சித்தார். ஆனால் அது முடியாத சூழலில் விஜய் பனையூர் அலுவலகத்திற்கு வந்தபோது அஜிதா மற்றும் அவரது ஆதரவாளர்கள் விஜயின் காரை மறித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் விஜயின் கார் அவர்களை பொருட்படுத்தாமல் அலுவலகத்திற்கு சென்றது.
அடுத்த சில நாட்களில் கடும் மன உளைச்சலில் இருந்த அஜிதா தற்கொலைக்கு முயற்சித்தார். இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இதை தொடர்ந்து தவெக வேட்பாளர் பட்டியலிலும் அஜிதாவின் பெயர் புறக்கணிக்கப்பட்டது. இதனால் கடும் அதிருப்தியில் இருந்த அஜிதா ஆக்னல் இன்று திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழியை நேரில் சந்தித்து திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
கன்னியாகுமரியில் பரப்புரைக்காக இன்று விஜய் தூத்துக்குடி விமான நிலையம் சென்ற நிலையில் அவரது கட்சியை சேர்ந்த பெண் நிர்வாகி திமுகவில் இணைந்து இருப்பது அரசியல் களத்தில் கவனம் ஈர்த்துள்ளது.
விஜய் தவெகவிற்கும் திமுகவிற்கும் தான் போட்டி என தொடர்ந்து விஜய் தெரிவித்து வரும் நிலையில் அக்கட்சியை சேர்ந்த வைஷ்ணவி, ரஞ்சனா நாச்சியார், அஜிதா ஆக்னல் போன்ற பெண்கள் திமுகவில் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
