அதிமுக ஐடி விங்கிற்கு தகுதியில்லை… டி.ஆர்.பி. ராஜா விமர்சனம்!

Published On:

| By Selvam

திமுகவுடன் வார் செய்யும் அளவுக்கு அதிமுக ஐடி விங்கிற்கு தகுதியில்லை என்று தொழில்துறை அமைச்சரும் திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளருமான டி.ஆர்.பி.ராஜா இன்று (ஜூன் 25) விமர்சித்துள்ளார்.

ஜூலை 1-ஆம் தேதி முதல் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். TRB Rajaa says aiadmk it wing

இந்தநிலையில், உறுப்பினர் சேர்க்கை நடத்தும் முறை குறித்து திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் இன்று (ஜூன் 25) சென்னை அண்ணா அறிவாலயத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டி.ஆர்.பி.ராஜா,

“தமிழகம் முழுவதும் 68,000 பூத் ஏஜண்ட்களை (BDA) வைத்து, அனைத்து இல்லங்களுக்கும் நேரடியாகச் சென்று, அங்கு இருக்கும் மக்களிடையே திமுகவின் திட்டங்கள் எல்லாம் அவர்களை சென்று சேர்ந்து இருக்கிறதா எனச் சரி பார்க்க இருக்கிறார்கள்.

அப்படி இல்லை என்றால், அதைக் கொண்டு போய் சேர்க்கும் வேலையை அவர்கள் செய்ய இருகிறார்கள். இதுவரை எவ்வளவோ மக்கள் நலத்திட்டங்களைத் திமுகச் செய்திருக்கிறது. அதையெல்லாம் மக்களிடம் கொண்டு போய் சேர்த்து இருக்கிறோம்.

இந்த இனத்தை எதிர்த்து வரும் எதிரிகளையும், இந்த இனத்திலேயே இருந்துகொண்டு துரோகம் செய்யும் துரோகிகளையும் முறியடிக்க வேண்டும். அதற்காக ஓரணியில் தமிழ்நாடு என்ற பயணத்தைத் தொடங்கி இருக்கிறோம்.

இந்தப் பயணத்தின் வழியாகத் தமிழ் இனத்திற்காக, தமிழ்நாட்டிற்காக, தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்காக, ஒட்டுமொத்த தமிழ் மக்களின் எழுச்சிக்காக நீங்கள் எல்லோரும் ஓரணியில் திரண்டு, தமிழ்நாட்டிற்காக நிற்க விரும்புகிறீர்களா என்ற கேள்வியை மக்களிடத்தில் கொண்டு போய்ச் சேர்க்க இருக்கிறோம்.

இந்த இனத்தின் எதிர்கள், கூடவே இருந்து குழிபறிக்கும் துரோகிகள் இவர்கள் எல்லோரையும் முறியடிக்க வேண்டும். இதற்குத் தமிழ்நாட்டு மக்கள் ஓரணியில் திரள வேண்டும். அந்த அணியின் தலைவராகத் திமுக தலைவர் ஸ்டாலின் இருக்க வேண்டும். அவர் இருந்தால் மட்டும் தான் விடியல் என்ற உண்மையை அவர்கள் இடத்தில் கொண்டுபோய் சொல்ல இருக்கிறோம்.

இந்தப் பயணம் இன்று ஜூன் 25 ஆம் தேதி ஆரம்பித்து இருக்கிறது. இந்தப் பயணத்தில் இன்று 234 தொகுதிகளிலும் இருந்து எங்களின் ஐ.டி.விங், 234 OTNAC எனப்படும் ஓரணியில் தமிழ்நாடு assembly co-ordinator அந்தத் தொகுதி பார்வையாளர்களை நியமித்து அவர்களுக்குப் பயிற்சியை வழங்கியிருக்கிறோம்.

அடுத்ததாக இந்த 234 பேரும் 27 ஆம் தேதி தொடங்கி 29 வரை ஒவ்வொரு தொகுதிகளிலும் வாக்குச்சாவடி, பூத் டிஜிட்டல் ஏஜெண்ட்களுக்குப் பயிற்சியைக் கொடுக்க இருக்கிறார்கள்.

அந்தப் பயிற்சியில் பூத்களின் பாகங்களைப் பிரித்துக் கொண்டு அவர்களுக்கும் பயிற்சி கொடுக்க இருக்கிறார்கள். ஜூலை 1 ஆம் தேதி முதலமைச்சர் இந்தப் பணியை முழுமையாகத் தொடங்கி வைப்பார்.

அடுத்தக்கட்டமாக இந்த பணியை ஜூலை 2 ஆம் தேதி மாவட்ட செயலாளர்கள் கையில் எடுப்பார்கள். ஜூலை 3 ஆம் தேதி இந்த இயக்கம் மக்கள் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு பொய் சேர்த்து, அதன்மூலம் இந்த இயக்கத்திற்குப் புதிய ரத்ததையும் பாய்ச்சி, உறுப்பினர் சேர்க்கையும் தொடங்கப் போகிறது.

இந்த முயற்சி இதுவரை இந்தியாவில் நடந்ததில்லை. உலகிலேயே எங்கும் நடந்ததில்லை என்று தான் கூறவேண்டும். எதிரணியில் இருக்கும் பலருக்கு பூத் ஏஜெண்ட்களே இல்லாமல் இருப்பார்கள். ஆனால் திமுகவுக்கு மட்டும்தான் BDA என்ற பொறுப்பையும் உருவாக்கி தரும் தெம்பு, திராணி இருக்கிறது” என்றார்.

தொடர்ந்து, திமுக ஐடி விங், அதிமுக ஐடி விங் இடையே சமூக வலைதளங்களில் கடுமையான மோதல் நடக்கிறதே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த டி.ஆர்.பி.ராஜா, “அவர்களெல்லாம் எங்களுடன் வார் செய்யும் அளவுக்கு தகுதியில்லை” என்று தெரிவித்தார். TRB Rajaa says aiadmk it wing

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share