அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.சண்முகம் மீதான கொலை முயற்சி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 15 பேர் இன்று (ஜூன் 25) விடுதலை செய்யப்பட்டனர்.
கடந்த 2010-ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள சி.வி.சண்முகம் தனது இல்லத்தில் கட்சி நிர்வாகிகளுடன் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது அவரது வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசி சி.வி.சண்முகத்தின் உறவினரும் அதிமுக தொண்டருமான முருகானந்தத்தை ஒரு கும்பல் வெட்டிக்கொலை செய்தது. இந்த கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கு தொடர்பாக பாமகவைச் சேர்ந்த சீனிவாசன், கருணாநிதி, குமரவேல், பிரதீபன், ரகு, சிவா உள்ளிட்ட 20 பேர் மீது ரோஷனை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பின்னர் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி இந்த வழக்கானது 2011-ஆம் ஆண்டு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. கடந்த 2014-ஆம் ஆண்டு திண்டிவனம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய 20 பேரில் 5 பேர் இறந்துவிட்டனர். மீதமுள்ள 15 பேர் மீது நீதிமன்ற விசாரணை நடைபெற்று வந்தது.
வழக்கு விசாரணையானது ஏப்ரல் 28-ஆம் தேதி நிறைவடைந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி முகம்மது பாரூக், குற்றம்சாட்டப்பட்ட 15 பேர் மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் விடுதலை செய்து தீர்ப்பளித்தார். 15 pmk cadres released cv shanmugam