தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில், இதுவரை 3,430 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. எடப்பாடி பழனிசாமி, சௌமியா அன்புமணி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இன்று (ஏப்ரல் 6) வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ய உள்ளனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த மார்ச் 15ஆம் தேதி வெளியானது. அன்றைய தினமே தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்தன.
கடந்த மார்ச் 30ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நிலையில், இன்றுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவடைய உள்ளது. கடைசி நாளான இன்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, சௌமியா அன்புமணி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ய உள்ளனர்.
இதையடுத்து, நாளை காலை 11 மணிக்கு அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தலைமையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெறும். ஏற்கப்பட்ட மற்றும் தள்ளுபடி செய்யப்பட்ட மனுக்களின் விவரம் நாளை மாலை வெளியாகும்.
வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற ஏப்ரல் 9ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு, சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட உள்ளன.
