நடிகை குஷ்பூவிடம் 3.5 கிலோ தங்கமும், 24 கிலோ வெள்ளிப் பொருட்களும் உள்ளது என அவரது கணவர் சுந்தர் சி தாக்கல் செய்துள்ள பிரமான பத்திரத்தில் தெரியவந்துள்ளது.
தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ம் தேதி 234 தொகுதிகளிலும் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அதிமுக-பாஜக கூட்டணியில், ஏசி சண்முகத்தின் புதிய நீதி கட்சிக்கு அதிமுக தரப்பில் ஒரு தொகுதியும், பாஜக தரப்பில் ஒரு தொகுதியும் என இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் அதிமுக தரப்பில் ஒதுக்கப்பட்ட மதுரை மத்திய தொகுதியில் வேட்பாளராக இயக்குநர் சுந்தர் சி அறிவிக்கப்பட்டார். பாஜக தரப்பில் ஒதுக்கப்பட்ட தொகுதியில் புதிய நீதிகட்சி வேண்டாம் என திருப்பி அளித்து விட்டதாக ஏசி சண்முகம் தெரிவித்தார்.
அந்த வகையில் மதுரையில் சுந்தர் சி இன்று (ஏப்ரல் 4) தனது மனைவியும பாஜக நிர்வாகியுமான நடிகை குஷ்புவுடன் சென்று வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
சொத்து விவரங்கள்
இந்நிலையில், சுந்தர்.சி. தனது வேட்பு மனுவில் தாக்கல் செய்த சொத்து விபரங்கள் தற்போது வெளியாகி உள்ளது. இதில் சுந்தர் சி பெயரில் ரூ.2.97 கோடி மதிப்பிலான அசையும் சொத்துக்களும், ரூ.17.7 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்களும் உள்ளதாகவும், அவரது மனைவி குஷ்பூ பெயரில் ₹6 கோடி மதிப்பிலான அசையும் சொத்துக்களும் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் அவரது மனைவியும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு பெயரில் ரூ. 6 கோடி மதிப்பில் அசையும் சொத்துகள் மற்றும் ரூ.4.17 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்களும் உள்ளதாக வேட்பு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சுந்தர் சியிடம் 3 கார்களும், குஷ்பூவிடம் ஒரு கார் உள்ளதாகவும் வேட்பு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோல் குஷ்பூவிடம் 3.5 கிலோ தங்கமும், 24 கிலோ வெள்ளிப் பொருட்களும் உள்ளதாக சுந்தர் சி தாக்கல் செய்த வேட்பு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
