அரசு ஊழியர்கள் போராட்டத்துக்கு உறுதுணையாக இருப்போம்- அரசுக்கு நெருக்கடி தருவோம்.. விஜய் தந்த உறுதி!

Published On:

| By vanangamudi

Jacto Jeo

அரசு ஊழியர்கள்- ஆசிரியர்களின் போராட்டத்துக்கு தமிழக வெற்றிக் கழகம் உறுதுணையாக இருக்கும்; அரசுக்கு நெருக்கடி தரும் வகையில் போராடுவோம் என்று தம்மை சந்தித்த ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகளிடம் நடிகர் விஜய் உறுதி அளித்துள்ளார். support the government employees protest.

ஜாக்டோ ஜியோ என்பது அரசு ஊழியர்- ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு. இதில் ஆசிரியர் இயக்கங்களின் 12 சங்கங்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட அமைப்புகள் இணைந்துள்ளன.

விஜய்யுடன் சந்திப்பு

இந்த நிலையில் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரும், உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் கழகத்தின் நிறுவனருமான மாயவன் தலைமையில் அந்த கழகத்தின் பொதுச்செயலாளர் குமரேசன், மாநில பொருளாளர் விஜய் சாரதி, மாநிலப் பொறுப்பாளர் ஜெயக்குமார் உட்பட 16 பேர் இன்று (ஜூன் 12) பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் மாலை 3.30 மணிக்கு விஜய்யை சந்தித்துப் பேசினர்.

விஜய் சந்திப்பின் பின்னணி என்ன?

இந்தப் பேச்சுவார்த்தை தவெகவின் பனையூர் அலுவலக வட்டாரங்களில் விசாரித்த போது,ஆதவ் அர்ஜூனா மற்றும் புஸ்ஸி ஆனந்த் மூலமாக கடந்த மாதம் 30-ந் தேதி விஜய்யை சந்திக்க இந்த சங்கத்தினர் முயற்சி செய்தனர். அப்போது, மாமல்லபுரத்தில் பள்ளி மாணவர்களுக்கு விஜய் பரிசு அளிக்கும் விழா நடைபெறும் இடத்துக்கு வருமாறு சொல்லப்பட்டது.

பனையூரில் விஜய்யுடன் சந்திப்பு

ஆனால், பொது இடத்தில் இந்த சந்திப்பு வேண்டாம் என மறுப்பு தெரிவித்தனர். இதனையடுத்து பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 3.30மணிக்கு சந்திக்க நேரம் கொடுக்கப்பட்டது. இன்று விஜய்யை சந்தித்த போது, ஆதவ் அர்ஜூனா, புஸ்ஸி ஆனந்த், அருண் ராஜ் உள்ளிட்டோர் இருந்தனர்.

விஜய்யிடம் முன்வைத்த கோரிக்கைகள்

இந்த சந்திப்பில், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகள் குறித்து விஜய்யிடம் ஆசிரியர்கள் சங்கத்தினர் விவரித்தனர். அத்துடன் திமுக தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் 4 ஆண்டுகளாக ஏமாற்றி வருகிறது எனவும் குமுறினர்.

அரசுக்கு நெருக்கடி தருவோம்- விஜய்

இதற்கு, உங்கள் கோரிக்கைக்காக உங்கள் அனைத்துவிதமான போராட்டத்துக்கும் முழு ஆதரவு உண்டு; உங்கள் கோரிக்கையை வென்றெடுக்கும் வரை நாங்கள் உறுதுணையாக இருப்போம்; உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற எங்கள் கட்சியின் சார்பாக இந்த அரசுக்கு அறிக்கை மூலமாகவும் போராட்டங்கள் மூலமாகவும் அழுத்தத்தையும் நெருக்கடியையும் கொடுப்போம். உங்களது அனைத்துவிதமான போராட்டங்களுக்கும் முழு ஆதரவு தருவோம் எனவும் உறுதியளித்த விஜய், ‘நீங்களும் எங்களுக்கு ஆதரவாக’ இருக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார் என்றனர்.

செல்போன்களுக்கு அனுமதி இல்லை

விஜய்யை சந்திக்க சென்ற ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகள் செல்போனை உள்ளே கொண்டு செல்ல தவெகவினர் அனுமதிக்கவில்லை. பின்னர் போராடி, கழகத்தின் நிறுவனர் மாயவனின் செல்போனை மட்டும் உள்ளே கொண்டு செல்ல அனுமதி தரப்பட்டது. இந்த செல்போனில் மட்டும் போட்டோக்கள் எடுக்கப்பட்டன.

போராடாத ஜாக்டோ ஜியோ சங்கம்

ஆசிரியர் சங்கத்தினரின் விஜய் உடனான சந்திப்பு பற்றி தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் தணிக்கையாளர் வெங்கடேசனை தொடர்பு கொண்டு கேட்ட போது, நடிகர் விஜய்யை மாயவன் தலைமையில் ஜாக்டோ ஜியோவினர் சந்தித்ததாக சொல்கின்றனர். ஜாக்டோ ஜியோ என்பது ஒரு தனி அமைப்பு அல்ல. பல சங்கங்கள் , பல கூட்டமைப்புகள், ஆசிரியர் சங்கங்கள், அரசு ஊழியர் சங்கங்கள் இணைந்ததுதான் ஜாக்டோ ஜியோ. மாயவனுடன் சென்றவர்கள், உயர்நிலை- மேல்நிலைபள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் மட்டும் சென்றுள்ளனர்; அதனை ஜாக்டோ ஜியோ என சொல்ல முடியாது. இருந்தாலும் ஜாக்டோ ஜியோ என சொல்லிக் கொண்டிருப்பவர்கள் அரசுக்கு எதிராக போராட யாரும் வருவதும் இல்லை. இதற்கு காரணம், ஜாக்டோ ஜியோ சங்கத்தில் திமுகவினர், திமுக கூட்டணியில் உள்ள சிபிஐ, சிபிஎம், விசிகவினரைச் சேர்ந்தவர்களும் இருக்கின்றனர். அதனால் திமுக அரசுக்கு எதிராக போராட யோசிக்கும் நிலையில் இவர்கள் விஜய்யிடம் ஆதரவு கேட்டதை நான் வரவேற்கிறேன். என்றார். support the government employees’ protest.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share