தமிழகத்தில் பாஜகவில் கோஷ்டி பூசல் இருக்கக் கூடாது என்றும் அனைவரும் ஒன்றாக இருந்து செயல்படுங்கள் என்றும் பாஜகவினருக்கு அமித்ஷா அறிவுறுத்தியிருக்கிறார். amitsha advised to annamalai
கடந்த ஜூன் 5 ஆம் தேதி பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது 41ஆவது பிறந்தநாளை கொண்டாடினார்.
இதையொட்டி மரக்கன்றுகள் வழங்குவது, மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்குவது, ரத்த தானம் வழங்குவது என கொண்டாடப்பட்டது.
மற்றொரு பக்கம் அவருடைய ஆதரவாளார்கள் கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர் என கொங்கு பகுதி முழுவதும் பிரம்மாண்ட ஏற்பாடுகளை செய்தனர்.
‘ஹேப்பி பர்த்டே சிங்கம்!’ ‘ஹேப்பி பர்த்டே அண்ணா’ உள்ளிட்ட வாசகங்களுடன் போஸ்டர்களை ஒட்டி அலப்பறை செய்தனர்.
பாஜகவில் எவ்வளவு பெரிய தலைவராக இருந்தாலும், இதுபோன்று தனிமனிதரை தூக்கி வைத்து கொண்டாடுவதை பாஜக விரும்புவதில்லை.
அண்ணாமலை ஆதரவாளர்களின் செயல்பாடுகள் தமிழக பாஜக தலைவர்களிடையே அதிருப்தியையும் கோபத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
இதனால் பாஜக தேசிய மகளிரணி தலைவியும், கோவை தெற்கு எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் மற்றும் நயினார் நாகேந்திரன் ஆதரவாளர்கள் அண்ணாமலையின் ஆதரவாளர்களின் செயல்பாடுகள் தொடர்பாக, டெல்லி தலைமைக்கு புகார்களை அனுப்பி வைத்தனர்.
இந்தசூழலில் தான் இருநாள் பயணமாக கடந்த 7ஆம் தேதி பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா மதுரை வந்தார். பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.
அப்போது அண்ணாமலையை அமித்ஷா எச்சரிப்பார் அல்லது அவர் மீது எதேனும் நடவடிக்கை எடுப்பார் என பாஜகவைச் சேர்ந்த சிலர் எதிர்பார்த்திருந்த சூழ்நிலையில்,
“தமிழகத்தில் பாஜகவில் கோஷ்டி பூசல் அதிகரித்து வருவது கட்சியின் வளர்ச்சியை பாதிக்கும். அதனால் ஒன்றிணைந்து செயல்படுங்கள். முருகன் பக்தர்கள் மாநாடு வெற்றி பெற வேண்டும். அதற்காக சிறப்பாக பணியாற்றுங்கள். அண்ணாமலையை அரவணைத்து மாநாட்டு பணிகளை ஒற்றுமையாக செய்யுங்கள் என்று நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், அண்ணாமலை உட்பட முக்கிய நிர்வாகிகளிடம் அறிவுறுத்தினார் அமித்ஷா. ” என்கிறார்கள் தமிழக பாஜக வட்டாரத்தில்.
அமித்ஷா சமரசம் செய்துவிட்டு சென்றாலும், அண்ணாமலை தனிச்சையாக செய்படுகிறார். மாற்றம் தெரியவில்லை என்று நயினார் நாகேந்திரன் ஆதரவாளர்கள் அதிருப்தி கூறுகிறார்கள்.
சமீபத்தில் அண்ணாமலை கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த போது, தமிழகத்தில் பாஜக ஆட்சி என்று பேட்டி அளித்திருந்தார்.
இதற்கு வானதி சீனிவாசன், அமித்ஷா சொன்னது போல கூட்டணி ஆட்சிதான் அமையும். அண்ணாமலை சொன்னது அவருடைய கருத்து என்று பதிலளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. amitsha advised to annamalai