இரும்பு வியாபாரியில் இருந்து சினிமா சாம்ராஜ்யம் வரை: சாதனைப் படைத்த ஆர்.பி.சௌத்ரியின் வாழ்க்கை!

Published On:

| By Santhosh Raj Saravanan

super good films rb choudary life journey

தமிழ் சினிமாவில் ‘வெற்றித் தயாரிப்பாளர்’ என்ற சொல்லுக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் ஆர்.பி.சௌத்ரி (RB Choudary). குடும்பங்கள் கொண்டாடும் படங்களைக் கொடுத்து, பல முன்னணி இயக்குநர்களை அறிமுகப்படுத்திய இவரின் திரைப்பயணம் அசாத்தியமானது. ஒரு சாதாரண வியாபாரியாக வாழ்க்கையைத் தொடங்கி, 99 படங்களைத் தயாரித்து, பல முன்னணி நட்சத்திரங்களை உருவாக்கிய அவரது வாழ்க்கை ஒரு சினிமாவுக்கே உரிய ஏற்ற இறக்கங்களைக் கொண்டது. சமீபத்தில் ராஜஸ்தானில் நடந்த கோர விபத்தில் அவர் மறைந்த அதிர்ச்சிச் செய்தியும் ஒட்டுமொத்தத் திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

RB Choudary இரும்பு முதல் சினிமா வரை!

ஆர்.பி.சௌத்ரி பூர்வீகமாக ராஜஸ்தானைச் சேர்ந்தவர் என்றாலும், அவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் நம்ம சென்னையில் தான். ஆரம்பத்தில் சினிமாவுக்கும் இவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை; அவர் ஒரு வெற்றிகரமான ‘ஸ்டீல் பிசினஸ்’ செய்து வந்தவர்.

ADVERTISEMENT

தொழில் ரீதியாக ‘குட்நைட்’ கொசுவத்தி தயாரிப்பாளர் மோகன் என்பவருடன் ஏற்பட்ட நட்பே இவரைச் சினிமா பக்கம் திருப்பியது. இருவரும் இணைந்து ‘Super’ என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி படங்களைத் தயாரித்தனர். பின்னாளில் மோகனிடம் இருந்து பிரிந்து தனியாகத் தொழில் தொடங்க நினைத்தபோது, பழைய நிறுவனத்தின் பெயரான ‘Super’ என்பதையும், மோகனின் ‘Goodnight’ நிறுவனத்தில் உள்ள ‘Good’ என்பதையும் இணைத்து ‘Super Good Films’ என்று பெயர் சூட்டினார். இதுவே பிற்காலத்தில் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய பிராண்டாக மாறியது.

இயக்குநர்களின் ஏணி; குடும்பங்களின் நாயகன்!

ஆர்.பி.சௌத்ரியின் மிகப்பெரிய பலமே புதுமுக இயக்குநர்களுக்கு அவர் கொடுத்த வாய்ப்புகள் தான். இன்று தமிழ் சினிமாவில் ஜாம்பவான்களாக இருக்கும் கே.எஸ்.ரவிக்குமார், விக்ரமன், சசி, எழில், லிங்குசாமி, பேரரசு போன்ற பல இயக்குநர்களை அறிமுகப்படுத்திய பெருமை இவரையே சேரும்.

ADVERTISEMENT

அதேபோல், இவர் தயாரித்த ‘நாட்டாமை’, ‘சூர்யவம்சம்’, ‘பூவே உனக்காக’, ‘ஆனந்தம்’, ‘திருப்பாச்சி’ போன்ற படங்கள் இன்றும் ரசிகர்களின் ஃபேவரைட். விஜய்யின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த ‘பூவே உனக்காக’ படத்தை தயாரித்தவர் இவர்தான். ஒரு படத்தின் கதையைத் தேர்ந்தெடுப்பதிலும், அதை மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலும் சௌத்ரி ஒரு ‘மாஸ்டர்’.

இல்லறமும் வாரிசுகளும்!

ஆர்.பி.சௌத்ரியின் தனிப்பட்ட வாழ்க்கை ஒரு மதநல்லிணக்கத் தளம் என்றே சொல்லலாம். இவரது மனைவி மஹஜபீன் (Mahjabeen) ஒரு தமிழ் முஸ்லிம் பெண்மணி. இந்தத் தம்பதிக்கு சுரேஷ், ஜீவன், ரமேஷ், ஜீவா (Jiiva) என நான்கு ஆண் குழந்தைகள். கடைசி இரு மகன்களான ஜித்தன் ரமேஷ் மற்றும் ஜீவா ஆகியோரை நடிகர்களாகத் திரைத்துறையில் களமிறக்கினார்.

ADVERTISEMENT
ராஜஸ்தானில் நேர்ந்த கோர விபத்து மற்றும் மறைவு

சமீபத்தில், தனது சொந்த மாநிலமான ராஜஸ்தானில் நடந்த ஒரு நெருங்கிய உறவினரின் திருமண விழாவில் கலந்து கொள்ள ஆர்.பி.சௌத்ரி சென்றிருந்தார். விழா முடிந்து மே 5-ஆம் தேதி மாலை, அவர் தனது மருமகன் மற்றும் ஓட்டுநர் கௌதமுடன் காரில் திரும்பிக் கொண்டிருந்தார்.

பீவார் (Beawar) அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஜூன்டா கிராமம் என்ற இடத்தில் கார் சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக மாட்டு மந்தை ஒன்று திடீரென குறுக்கே வந்துள்ளது. அவற்றின் மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் காரை வேகமாகத் திருப்பியபோது, கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர தடுப்புச் சுவரில் மிகக் கொடூரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ஆர்.பி.சௌத்ரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் பயணித்த மற்ற இருவரும் பலத்த காயங்களுடன் ஜோத்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திரையுலகினர் அஞ்சலி

ஆர்.பி.சௌத்ரியின் மறைவுச் செய்தி கேட்டு திரையுலகமே நிலைகுலைந்து போயுள்ளது. ஆர்.பி.சௌத்ரியின் மறைவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல் ஹாசன், சிரஞ்சீவி மற்றும் பவன் கல்யாண் ஆகியோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், “என் அருமை நண்பர் ஆர்.பி.சௌத்ரி ஒரு அற்புதமான மனிதர். எத்தனையோ இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்து திரையுலகை வாழவைத்தவர். அவருடைய மரணச் செய்தி எனக்குப் பேரதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது,” என இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி, கண்ணீர் விட்டு கதறிய ஜீவாவை கட்டிப்பிடித்து ஆறுதல் கூறினார்.

சினிமாவில் தனது 100-வது தயாரிப்பைத் தளபதி விஜய்யை வைத்து உருவாக்க வேண்டும் என்ற ஆர்.பி.சௌத்ரியின் நீண்ட நாள் ஆசை நிறைவேறாமலேயே போனது பெரும் சோகமே. தமிழ் சினிமா வரலாற்றில் ‘வெற்றித் தயாரிப்பாளர்’ என்ற பெயர் என்றும் ஆர்.பி.சௌத்ரி எனும் ஆளுமைக்குத் தான் சொந்தமாக இருக்கும். ஒரு தயாரிப்பாளராக மட்டுமல்லாமல், பலருடைய வாழ்வாதாரத்தை உயர்த்திய ஒரு ‘தந்தையாகவே’ ஆர்.பி.சௌத்ரி என்றும் நினைவு கூரப்படுவார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share