திமுக பொதுக்குழு கூட்டம் ஜூன் 1-ஆம் தேதி மதுரையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் பேசும்போது, விரைவில் கட்சி நிர்வாகிகளான உங்களை அறிவாலயத்தில் ஒன் டூ ஒன் நேருக்கு நேர் சந்தித்து பேசப்போகிறேன் என்று தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், கடலூர், விழுப்புரம், மதுரை மாவட்டங்களில் இருந்து மூன்று சட்டமன்ற தொகுதிகளில் ஒன்றிய, நகர, பேரூராட்சி செயலாளர்களை அறிவாலயத்திற்கு அழைத்து தனித்தனியாக இன்று (ஜூன் 13) சந்தித்து பேசியிருக்கிறார் ஸ்டாலின்.
இதுகுறித்து அறிவாலய வட்டாரத்தில் நாம் விசாரித்தபோது,
“தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் தொகுதி நிலவரம் குறித்து திமுக தலைமை ரிப்போர்ட் வாங்குகிறார்கள். அந்த ரிப்போர்ட்டை க்ரீன் G, ஃபேவரிட் F, பேட்டல் B, ரெட் R GFBR என நான்கு விதமாக பிரித்துள்ளார்கள்.

இதில் க்ரீன் என்பது வெற்றி உறுதி என்பதை குறிக்கிறது. ஃபேவரிட் வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. பேட்டல் என்பது தீவிரமாக வேலை செய்தால் வெற்றி பெறலாம். ரெட் என்பது தோல்வி உறுதி.
இந்த மூன்று மாவட்டங்களிலும் ரெட் அலர்ட் தொகுதிகளான கடலூர் மாவட்டம் சிதம்பரம் சட்டமன்ற தொகுதி, விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம் சட்டமன்ற தொகுதி, மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதியில் நகர, ஒன்றிய, பேரூராட்சி செயலாளர்களை அழைத்து தொகுதி வாரியாக ஒவ்வொரு நிர்வாகிகளிடமும் மூன்று நிமிடங்கள் முதல் ஆறு நிமிடங்கள் வரை கருத்துக்களை கேட்டு பேசியுள்ளார் ஸ்டாலின்.
நிர்வாகிகளை அழைக்கும் முன்பே அவர் எந்த சமூகம், அந்த பகுதியில் எந்த சமுதாய மக்கள் அதிகமாக இருக்கிறார்கள், எத்தனை வருடமாக கட்சியிலும் பதவியிலும் இருக்கிறார், மாவட்ட செயலாளருக்கும் இவருக்கும் எப்படிப்பட்ட நெருக்கம் இருக்கிறது, எந்த மாதிரியான பணி செய்கிறார்கள், அவர் மீது என்ன புகார் இருக்கிறது என அனைத்து விவரங்களையும் கையில் டேட்டாவாக வைத்திருந்தார் ஸ்டாலின்.
நிர்வாகிகள் உள்ளே சென்றதும், ஸ்டாலின் பக்கத்தில் அமர்ந்திருந்த அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, இணை அமைப்பு செயலாளர் அன்பகம் கலை ஆகிய இருவரும், வந்திருக்கும் நிர்வாகியிடம் “நீங்கள் என்ன சமுதாயம்?” என டேட்டாவை கையில் வைத்துக்கொண்டு கேள்வி கேட்டனர்.

விழுப்புரம் சட்டமன்ற தொகுதி கோலியனூர் ஒன்றிய செயலாளர் முருகவேல் சென்றபோது, ‘நீங்கள் உடையார் சமுதாயமா?’ என்று கேட்டனர். அதற்கு ‘ஆமாங்க’ என்று பதில் சொன்னார்.
‘வன்னியர் நிர்வாகிகளிடம் நீங்கள் நெருக்கமாக இல்லை’ என்று புகார் வருகிறதே என்று கேட்டபோது, ‘எங்கள் ஒன்றியத்தில் சிறப்பாக வேலை செய்வதாக தலைவரே சொல்லியிருக்கிறார். வன்னியர் நிர்வாகிகள் ஒத்துழைப்பு இல்லை என்றால் நான் எப்படி சிறப்பாக பணி செய்ய முடியும்.
இந்த ஒன்றியத்தில் வன்னியர், பட்டியல் சமூக வாக்குகள் தான் அதிகம். அவர்கள் தான் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்ககூடியவர்கள்.
அப்படிப்பட்ட நிர்வாகிகளுடன், நான் விலகி இருக்க முடியுமா? 45 வருடமாக முன்னாள் அமைச்சர் பொன்முடியுடன் அரசியல் செய்கிறேன். ஆனால், புதிதாக மாவட்ட செயலாளர் லட்சுமணனும் அவரது ஆதரவாளர்களும் பொன்முடியிடம் பேசக்கூடாது, அவரது படத்தை பேனரில் போடக்கூடாது என்று உத்தரவு போடுகிறார்கள். பொன்முடியிடம் நாங்கள் எப்படி பேசாமல் இருக்க முடியும்?’ என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

அப்போது ஸ்டாலின், “நீங்க ஒற்றுமையாக பணியாற்றுங்கள். நான் லட்சுமணனிடம் பேசுகிறேன்” என்றார்.
தொடர்ந்து வளவனூர் நகர செயலாளர் ஜீவா, ‘எங்கள் பேரூராட்சியில் உடையார் சமுதாயம் அதிகமாக இருக்கிறார்கள். நாங்கள் திமுக வெற்றிக்கு சிறப்பாக வேலை செய்கிறோம்’ என்றவர் மாவட்ட செயலாளர் லட்சுமணன் மீது சில குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.
விழுப்புரம் நகர செயலாளர் சக்கரையிடம், ‘இந்த தேர்தலில் உங்கள் ஒன்றியத்தில் அதிக வாக்குகள் பெற்று கொடுத்திருக்கிறீர்கள். ஆனால், கட்சிக்காரர்களை திட்டுவதாகவும் உங்களுக்குள் ஓர் இடைவெளி இருப்பதாகவும் புகார் வந்துள்ளதே’ என்று ஆர்.எஸ்.பாரதி கேள்வி கேட்டார்.
அதற்கு ‘கட்சிக்காரர்களிடம் உரிமையாக பேசுவேன். அப்படி பேசினால் தான் வேலை நடக்கும். இனிமேல் அதுபோல் நடக்காது, நான் சரிசெய்து கொள்கிறேன்’ என்று உறுதியளித்தார் சர்க்கரை.
கண்டமங்கலம் ஒன்றிய செயலாளர் பிரபாகரனிடம், ‘உங்கள் மீது நிறைய புகார்கள் வருகிறதே?’ என்றனர்.
அதற்கு, ‘கட்சிப்பணி செய்யவில்லை என்று என் மீது எந்த புகாரும் வராது. இப்போது வந்துள்ள மாவட்ட செயலாளர் லட்சுமணனின் உதவியாளர் மணவாளன் தான் மாவட்ட செயலாளர் போல செயல்படுகிறார். திடீரென பொன்முடி படத்தை போடக்கூடாது, பெயரை போடக்கூடாது என்று நெருக்கடி கொடுத்தால் எப்படி நாங்கள் அரசியல் செய்வது?’ என்று புகார் வாசித்தார்.
தொடர்ந்து, கோலியனூர் பகுதி மற்றொரு ஒன்றிய செயலாளரான தெய்வசிகாமணியிடம், ’தொகுதி வெற்றிக்கு என்ன செய்யலாம்?’ என்று கேள்வி கேட்டனர்.
’குரூப்பிசம் இல்லாமல் அனைவரும் ஒன்று சேர்ந்து உழைத்தாலே எளிதில் வெற்றி பெறலாம்’ என்று சொன்னார். அப்போது ஸ்டாலின், ‘சரி அதை பார்த்துக்கலாம். நீங்க ஒற்றுமையா வேலை செய்யுங்க’ என்றார்.
தொடர்ந்து, சிதம்பரம் சட்டமன்ற தொகுதியில் குமராட்சி, பரங்கிப்பேட்டையை சேர்ந்த ஐந்து ஒன்றிய செயலாளர்கள், அண்ணாமலை நகர் பேரூராட்சி செயலாளர், கிள்ளை பேரூராட்சி செயலாளர், சிதம்பரம் நகர கழக செயலாளர் ஆகியோரிடம் பேசினார்.
சிதம்பரம் தொகுதியானது கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளரும் அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் வசம் வருவதால், எம்.ஆர்.கே பற்றி புகார் சொன்னால் அவரிடம் அன்பகம் கலை ஏதாவது சொல்லிவிடுவாரோ என்று ஒன்றிய செயலாளர்கள் தயங்கி தயங்கி பேசினார்கள்.
அதில் ஒருவரிடம், ’தொகுதியில் வெற்றி வாய்ப்பு மிகவும் குறைவாக இருக்கிறது. வரக்கூடிய தேர்தலில் வெற்றி பெற என்ன செய்யலாம்’ என்று கேட்டனர்.
அதற்கு சற்று தயக்கத்துடன், ‘காண்ட்ராக்ட் வேலையை எங்களுக்கு ஒதுக்கி தந்தால் கொஞ்சம் நல்லா இருக்கும்’ என்றார்.
உடனே முதல்வர் ஸ்டாலின், ‘சரி… நீங்க நல்லா கட்சிக்கு வேலை செய்திருக்கிறீர்கள். இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும். பார்த்துக்கலாம்’ என்று அனுப்பி வைத்தார்.
சிதம்பரம் நகர செயலாளர் செந்திலிடம், ‘ஏன் உங்க ஏரியா ரொம்ப மோசமாக இருக்கிறது. பார்த்து சரி செய்துகொள்ளுங்கள்’ என்று ஸ்டாலின் பேசி அனுப்பி வைத்தார். இவர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வத்தின் அக்கா பையன்.
இதேபோல, உசிலம்பட்டி தொகுதி நிர்வாகிகளிடமும் மூன்று முதல் ஆறு நிமிடங்கள் வரை ஸ்டாலின் பேசினார். தொகுதி வாரியாக நிர்வாகிகளை ஸ்டாலின் சந்தித்து வருவதால், அமைச்சர்கள் பலரும் தங்களை பற்றி முதல்வரிடம் புகார் சொல்லிவிடுவார்களோ என்று கலக்கத்தில் இருப்பதாக சொல்கிறார்கள்’ அறிவாலய வட்டாரத்தில். stalin one to one with dmk cadres