பிரபல பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (வயது.92)உடல் நலக்குறைவு காரணமாக இன்று (ஏப்ரல் 12) காலமானார்
மகாராஷ்டிரா மாநிலம் சங்கலியில் 1933ஆம் ஆண்டு பிறந்தவர் ஆஷா போஸ்லே. இவர் மறைந்த பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கரின் சகோதரி ஆவார்.ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். 70 ஆண்டுகளுக்கும் மேலாக இசைத் துறையில் பணியாற்றி வந்த இவர், தாதா சாகிப் பால்கே விருது, பத்ம விபூஷன் உள்ளிட்ட உயரிய விருதுகளைப் பெற்றவர். இரண்டு முறை தேசிய விருதுகளையும் பெற்றுள்ளார்.
தமிழில் இளையராஜா, ஏ.ஆர். ரகுமான் இசையில் பல்வேறு பாடல்களைப் பாடியுள்ளார். குறிப்பாக,எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில் “செண்பகமே செண்பகமே” ஹேராம் படத்தில் “நீ பார்த்த பார்வை” அலைபாயுதே படத்தில் “செப்டம்பர் மாதம்” சந்திரமுகி படத்தில் “கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்” உள்ளிட்ட பாடல்களைப் பாடியவர் ஆஷா போஸ்லே.
மும்பையில் வசித்து வந்த அவருக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக மும்பையில் உள்ள பிரீச்கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சையில் இருந்த அவருக்கு சுவாசப் பிரச்சினை காரணமாக செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி ஆஷா போஸ்லே இன்று உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அவரது மறைவு செய்தியை மகன் ஆனந்த் போஸ்லே உறுதி செய்துள்ளார். மேலும் ஆஷா போஸ்லேவின் இறுதிச் சடங்கு நாளை மாலை 4 மணியளவில் மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
