வட்டி விகிதம் குறையுமா? எதிர்பார்ப்பை கிளப்பும் ரிசர்வ் வங்கியின் பணவியல் கூட்டம்!

Published On:

| By Santhosh Raj Saravanan

மேற்கு ஆசியாவில் தொடரும் பதட்டங்கள், அதிகரித்து வரும் எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் மற்றும் விநியோகச் சங்கிலி சவால்களுக்கு மத்தியில் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) இந்த முறை ரெப்போ விகிதத்தை (Repo Rate) 5.25 சதவீதமாக நிலையாக வைத்திருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கைக் குழுவின் கூட்டம் மே 3 புதன்கிழமை அன்று தொடங்குகிறது. ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா கூட்டத்தின் முடிவுகளை மே 5 வெள்ளிக்கிழமை அன்று அறிவிப்பார்.

ரெப்போ விகிதத்தை நிலையாக வைத்திருக்கும் அதே வேளையில், ரிசர்வ் வங்கி தனது எச்சரிக்கையான நிலைப்பாட்டைத் தொடரும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இருப்பினும், அதிகரித்து வரும் எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள், ரூபாயின் மதிப்பு சரிவு மற்றும் விநியோகச் சங்கிலி இடையூறுகள் ஆகியவை ரிசர்வ் வங்கியை அதன் பணவீக்கக் கணிப்பை உயர்த்தவும், மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி கணிப்பைக் குறைக்கவும் வழிவகுக்கும் என்று சில நிபுணர்கள் கூறுகின்றனர்.

ADVERTISEMENT

ஏப்ரல் மாதத்தில் மேற்கு ஆசிய மோதலின் தாக்கத்தை எரிசக்தி விநியோகம், பணவீக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றில் மதிப்பிடுவதற்காக ரிசர்வ் வங்கி “காத்திருந்து கவனிக்கும்” அணுகுமுறையைக் கடைப்பிடித்து, ரெப்போ விகிதத்தை நிலையாக வைத்திருந்தது. தற்போதைய நிலையற்ற சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, ஜூன் மாத பணவியல் கொள்கையில் ரெப்போ விகிதம் நிலையாக வைக்கப்பட வாய்ப்புள்ளது என்று ஸ்டேட் வங்கியின் (SBI) பொருளாதார ஆராய்ச்சித் துறை வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையின்படி, நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CPI) அடிப்படையிலான பணவீக்க விகிதம் அடுத்த மூன்று காலாண்டுகளில் 5 சதவீதத்திற்கு மேல் இருக்கலாம். அதே நேரத்தில் நடப்புக் காலாண்டில் இது 4 முதல் 4.1 சதவீதம் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2025-26 நிதியாண்டின் நான்காவது காலாண்டில் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7.2 சதவீதமாகவும், முழு நிதியாண்டிற்கும் 7.5 சதவீதமாகவும் இருக்கும் என்று அந்த அறிக்கை மதிப்பிட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை நிலையாக வைத்து, நடுநிலையான கொள்கை நிலைப்பாட்டைப் பராமரிக்க வாய்ப்புள்ளது என்று கிரிசில் ஆய்வு நிறுவனத்தின் தலைமைப் பொருளாதார நிபுணர் தீப்தி தேஷ்பாண்டே கூறினார். அதிக எரிபொருள் செலவுகள், உயர்ந்து வரும் மூலப்பொருட்களின் விலை மற்றும் ரூபாயின் பலவீனம் உள்ளிட்டவற்றால் தற்போதைய பணவீக்க அழுத்தங்கள் முதன்மையாக விநியோகப் பக்கத்தால் ஏற்படுகின்றன என்று அவர் கூறினார்.

Photo of author
Santhosh Raj Saravanan
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share