ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக அமைச்சர் காந்தி இன்று (ஏப்ரல் 6) வேட்புமனு தாக்கல் செய்தார்.
ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதியில், இந்த முறை அமைச்சர் காந்திக்கு பதிலாக அவரது மகன் வினோத் காந்திக்கு திமுக தலைமை வாய்ப்பு வழங்கியது.
இதனால் அதிருப்தியடைந்த அமைச்சர் காந்தி, முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலினிடம் பேசியிருக்கிறார். இதைத்தொடர்ந்து ராணிப்பேட்டை தொகுதி வேட்பாளர் மாற்றம் என விரைவில் அறிவிப்பு வரும் என திமுக தரப்பில் தெரிவித்தனர்.
இதுகுறித்து மின்னம்பலத்தில், “ராணிப்பேட்டை திமுகவில் ‘திக்.. திக்..’.. வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்வாரா? என்ன நடக்கிறது?” என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
அதன்படி இன்று காலை அறிக்கை வெளியிட்ட அமைச்சர் காந்தி மகன் வினோத் காந்தி, “என் தந்தையார் மீண்டும் போட்டியிடும் உறுதியான விருப்பத்தை கருத்தில் கொண்டு, இந்த வாய்ப்பை அவருக்கு மரியாதையுடன் மீண்டும் ஒப்படைக்க முடிவு செய்துள்ளேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்தசூழலில் தனது மகனுடன் சென்று ராணிப்பேட்டை தொகுதியில் போட்டிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார் அமைச்சர் காந்தி.
இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் காந்தி, “தலைவர் முடிவெடுத்ததால் நான் மீண்டும் போட்டியிடுகிறேன். தலைவர் 200 தொகுதி என்கிறார், ஆனால் கள சூழல்படி 234 தொகுதிகளிலும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெறும்” என்று கூறினார்.
