கடலூருக்கு புதிய எஸ்.பி.யாக ராஜாராம் நியமிக்கப்பட்டுள்ளார். யார் இவர்?
கடந்த ஜனவரி 19ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்தகூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கடலூர் எஸ்.பி.யாக இருந்த சக்தி கணேசனின் பணி மெச்ச தகுந்தபடி இல்லை என்று கூறியிருந்தார்.
இதுகுறித்து மின்னம்பலத்தில் விரிவாக செய்தி வெளியிட்டிருந்தோம். ’சட்டம் ஒழுங்கு: காற்றோடு போனதா ஸ்டாலின் எச்சரிக்கை?’ என்ற தலைப்பில் வெளியிட்டிருந்த அந்த செய்தியில், கடலூர் மாவட்டத்தில் அதிகரித்த குற்ற விவரங்களைப் பட்டியலிட்டிருந்தோம்.
ஆய்வுக் கூட்டத்தில் வெளிப்பட்ட முதல்வரின் எச்சரிக்கை காற்றோடு போனதா என்ற கேள்வி காவல்துறை வட்டாரத்திலேயே கேள்வி எழுந்ததை சுட்டிக்காட்டியிருந்தோம்.
இந்த செய்தி முதல்வர் , தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர் கவனத்துக்கு சென்றது.
இந்தச்சூழலில் கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி உள்துறை செயலாளர் பனீந்திர ரெட்டி ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து வெளியிட்ட பட்டியலில் சக்தி கணேசனும் இடம் பெற்றிருந்தார்.
கடலூர் எஸ்.பியாக இருந்த அவர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிஐடி எஸ்.பி.யாக சென்னைக்கு மாற்றப்பட்டார். கடலூர் எஸ்.பியாக சென்னை கொளத்தூர் துணை ஆணையராக இருந்த ராஜாராம் நியமிக்கப்பட்டார்.
யார் இவர்?
கடந்த அதிமுக ஆட்சியில் சிலை கடத்தல் தடுப்பு மற்றும் பாதுகாப்பு பிரிவில் டிஎஸ்பி, ஏடிஎஸ்பியாக பணியாற்றியவர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் டிஎஸ்பியாக இருந்தபோது அதிமுக ஆட்சியில் அதிமுக பிரமுகர்கள் (தற்போது எம்.எல்.ஏ.வாக இருக்கும்) பாண்டியன், மற்றும் அதிமுக நிர்வாகி சுந்தர் ஆகியோர் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்தவர். நேர்மையானவர் என காவல் துறையினரால் பேசக்கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-வணங்காமுடி
Comments are closed.