வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மழைநீர் வடிகால் பணிகளின் இறுதி நிலை குறித்து வரும் 8 ஆம் தேதி முதல்வர் ஆய்வு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சியில் மழை நீர் வடிகால் கட்டமைத்தல், தூர்வாருதல், பக்கிங்ஹாம், ஓட்டேரி, மாம்பலம் உள்ளிட்ட கால்வாய்கள், ஆறுகள் ஆகியவற்றை தூர் வாரி, கரைகளை பலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
வெள்ள பாதிப்புகள் ஏற்படாமல் தவிர்க்க வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்னர் பணிகளை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை மாநகராட்சி, நெடுஞ்சாலை துறை, மற்றும் பொதுப்பணி துறை ஆகியவை சென்னையில் மேற்கொண்டு வரும் இந்த பணிகள் தொடர்பாக அமைச்சர்கள் கே.என் நேரு, எ. வ.வேலு, மா.சுப்ரமணியன், சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், தலைமை செயலாளர் இறையன்பு, நகராட்சி நிர்வாக துறை செயலாளர் சிவதாஸ் மீனா மற்றும் துறை சார்ந்த உயர் அதிகாரிகள் என பலர் பல்வேறு முறை ஆய்வு செய்து வருகின்றனர்.
வடிகால் பணிகளை விரைவுப்படுத்தி அக்டோபர் மாதம் 15 ஆம் தேதிக்குள் பணிகளை முடிக்கவும் உத்தரவிட்டுள்ளனர்.
இதனிடையே பருவமழைக்கு முன்னதாக முடிக்கப்பட்ட மற்றும் நடைபெற்று வரும் முன்னெச்சரிக்கை மற்றும் மழை நீர் வடிகால் பணிகளை தலைமைச் செயலாளர் இறையன்பு வரும் 7 ஆம் தேதியும், முதலமைச்சர் மு.க ஸ்டாலின் 8 ஆம் தேதியும் நேரில் ஆய்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து மழைநீர் வடிகால் பணிகள் வேகவேகமாக நடைபெற்று வருகின்றன.
கலை.ரா