“வெயில் மண்டையைப் பிளக்குது” என்று சொல்லாதவர்களே இப்போது இல்லை. ஏப்ரல் மாதம் பிறந்துவிட்டாலே போதும், சூரியன் தன் வேலையைக் காட்டத் தொடங்கிவிடுகிறது. மதிய நேரங்களில் வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்குத் திரும்பினால், உடல் அப்படியே அனலாய் கொதிப்பதைக் உணர முடியும். உடனடியாக ஒரு ஐஸ் வாட்டரை குடித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றும், ஆனால் அது தற்காலிகமானதுதான்.
உடலை உள்ளுக்குள்ளிருந்து குளிரூட்டவும், அந்த ‘அசதி’யைப் போக்கவும் நம் வீட்டுச் சமையலறையிலேயே ஒரு சூப்பர் மேஜிக் பானம் ஒளிந்திருக்கிறது.
வேர்க்க விறுவிறுக்க வேண்டாம்: இதோ அந்த ‘ஸ்பெஷல்’ மோர்
நம்ம ஊர் வெயிலுக்கு ‘நீர் மோர்’ போல ஒரு அருமருந்து வேறு எதுவும் இல்லை. ஆனால், அதை ஏனோ தானோ என்று குடிக்காமல் கொஞ்சம் ஸ்பெஷலாகத் தயார் செய்யலாம். இதற்குப் பெரிய வேலைப்பாடுகள் எதுவும் தேவையில்லை. ஒரு கப் தயிர் இருந்தால் போதும், அடுத்த 2 நிமிடத்தில் உங்கள் கையில் ஒரு புத்துணர்ச்சி பானம் இருக்கும்.
முதலில் தயிரை நன்றாகக் கடைந்து கொள்ளுங்கள் (மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றினால் இன்னும் சுலபமாக இருக்கும்). அதில் இரண்டு மடங்கு தண்ணீர் ஊற்றவும். இப்போது ஒரு சிறிய துண்டு இஞ்சியைத் தட்டிப் போடுங்கள். இதனுடன் பொடியாக நறுக்கிய கருவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள் சேர்த்தால் வாசனையே ஆளைத் தூக்கும். உப்பு மட்டும் உங்கள் தேவைக்கேற்ப சேர்த்துக் கொள்ளுங்கள்.
குளிர்ச்சி தரும் வெள்ளரி: ஒரு ‘குவிக்’ MAgic drink
மோருக்கு அடுத்தபடியாக உடலை உடனே ஜில்லென்று மாற்ற வெள்ளரிக்காய் சிறந்த தேர்வு. வெள்ளரிக்காயைத் தோல் சீவி சிறிய துண்டுகளாக்கி மிக்ஸியில் போட்டுக்கொள்ளுங்கள். அதனுடன் நான்கு புதினா இலைகள் மற்றும் பாதியாக நறுக்கிய எலுமிச்சைச் சாற்றைப் பிழிந்து விடவும்.
இதை நன்றாக அரைத்து வடிகட்டினால் ஒரு அற்புதமான ‘வெள்ளரி லெமனேட்’ தயார். சர்க்கரைக்குப் பதில் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்தால் அதன் சுவையே தனி. இது தாகத்தைத் தீர்ப்பது மட்டுமல்லாமல், வெயிலால் பொலிவிழந்த உங்கள் சருமத்திற்கு ஒரு நல்ல புத்துணர்ச்சியையும் தரும்.
ஏன் இந்தப் பானங்கள் சிறந்தது?
கடைகளில் விற்கப்படும் வண்ணமயமான குளிர்பானங்களில் அதிகப்படியான சர்க்கரை மற்றும் கெமிக்கல்கள் உள்ளன. அவை தற்காலிகமாக இனிமையாகத் தெரிந்தாலும், உண்மையில் உடல் சூட்டை அதிகரிக்கவே செய்யும். ஆனால், நாம் வீட்டில் தயாரிக்கும் இந்த நீர் மோரும், வெள்ளரிச் சாறும் இயற்கையான எலக்ட்ரோலைட்டுகளைக் கொண்டவை.
இந்த பானங்கள் உடலில் உள்ள நீர்ச்சத்தை (Hydration) சமநிலையில் வைக்க உதவுகின்றன. குறிப்பாக, வெயிலில் வேலை செய்பவர்களுக்கும், அலைச்சலில் இருப்பவர்களுக்கும் இது ஒரு உடனடி எனர்ஜி பூஸ்டர்.
கடைசியாக ஒரு விஷயம்… வெயிலில் செல்லும்போது ஒரு பாட்டில் தண்ணீரை எப்போதும் கையில் வைத்திருங்கள். முடிந்தவரை இயற்கை பானங்களைத் தேர்ந்தெடுங்கள். சின்னச் சின்ன மாற்றங்கள் உங்கள் ஆரோக்கியத்திற்குப் பெரிய பலனைத் தரும்.
