காங்கிரஸ் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களை மாற்ற வேண்டும் என வலியுறுத்தி, கோவை காமராஜ் பவன் அலுவலகம் முன்பு செல்வப் பெருந்தகைக்கு பண மாலை அணிவித்த புகைப்படத்துடன் காங்கிரஸ் கட்சியினர் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் நீண்ட இழுபறிக்குப் பின்னர் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. மொத்தம் 28 தொகுதிகளில் 27 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இன்று (ஏப்ரல் 3) அக்கட்சி அறிவித்துள்ளது. தொகுதி பங்கீடு முடிந்து நீண்ட நாட்களுக்குப் பின்னர் இன்று வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது.அதில் சிங்காநல்லூர் தொகுதிக்கு இளைஞர் காங்கிரஸின் தேசிய செயலாளர் ஸ்ரீநிதி வி. ஸ்ரீநிதி நாயுடு என்பவருக்கும், கவுண்டம்பாளையம் தொகுதிக்கு மாநில இளைஞர் காங்கிரஸ் செயலாளர் சூரிய பிரகாஷ் என்பவரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இது கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து இன்று மாலை காங்கிரஸ் கட்சி அலுவலகமான காமராஜ் பவன் முன்பு கூடிய அக்கட்சி தொண்டர்கள், வேட்பாளர்கள் இருவரையும் மாற்ற வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பேசிய காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், “கோவை மாவட்டத்தில் சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம் தொகுதிகளில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்களை மாற்ற வேண்டும் என்பதை டெல்லியின் கவனத்திற்கு எடுத்துச் செல்லும் விதமாக இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. தற்போது அறிவிக்கப்பட்ட இரு வேட்பாளர்களும் கட்சிக்கு வந்து வெறும் இரண்டு வருடங்கள் மட்டுமே ஆகின்றன. 25 முதல் 40 ஆண்டுகளாக இந்தக் கட்சிக்கு உழைத்தவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை” என்றனர்.
மேலும், “தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி டெல்லிக்கும், ராகுல் காந்திக்கும் தவறான தகவலை தெரிவித்திருக்கிறது. கட்சிக்கு தொடர்பில்லாதவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது” என்றும் குற்றம் சாட்டினர்.சிங்காநல்லூர் வேட்பாளர் மக்கள் நீதி மய்யத்தில் இருந்து அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளுக்குச் சென்றுவிட்டு பின்னர் காங்கிரஸ் கட்சிக்கு வந்தவர். “டெல்லிக்கு தவறான தகவல் சொல்லி பணம் பெற்றுக்கொண்டு இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. பட்டியலை தயாரித்தவர்கள் பணம் வாங்கிக்கொண்டு செயல்பட்டதாக” குற்றம் சாட்டினர்.
இதுதவிர, “கடந்த வாரம் நடந்த கூட்டத்தில் தயாரிக்கப்பட்ட பட்டியலில் இவர்கள் இருவரின் பெயரும் இல்லை. இவர்கள் திடீரென வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். சொந்தக் கட்சியினருக்கும், கூட்டணிக் கட்சியினருக்கும் இவர்கள் யார் என்றே தெரியாது” என்றனர்.இந்த வேட்பாளர்களால் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு பின்னடைவு ஏற்படும் என்றும், தொகுதியில் நிறைய சீனியர் தலைவர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல் தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்தனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது காங்கிரஸ் நிர்வாகிகள், காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் நிவேதித் ஆல்வா, காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், மற்றும் காங்கிரஸ் கமிட்டி மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை ஆகியோர் கழுத்தில் பண மாலை அணிந்திருந்த புகைப்படத்தை கையில் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் “எம்.எல்.ஏ. சீட்டை விற்காதே! வேட்பாளரை மாற்று!” என மாறி மாறி கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.
