அண்ணன் திருமாவளவனுக்கும் எங்களுக்கும் நல்ல புரிதல் இருக்கிறது, ஒரு நட்பு இருக்கிறது என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், பிரேமலதா விஜயகாந்தை வேட்பாளராக அறிமுகப்படுத்தியபோது அவர் எழுந்து நிற்காதது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது.
தேர்தல் பணிகளுக்கிடையே இன்று (ஏப்ரல் 12) சேலத்தில் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது திருமாவளவன் அறிமுகம் செய்தபோது எழுந்து நிற்காதது குறித்த கேள்விக்கு, “திருமாவளவனே நேற்று ஒரு பிரச்சாரத்தில் தெளிவாக அது குறித்து பதில் சொல்லிவிட்டார். அன்று இரவே அவர் என்னுடன் போனில் பேசினார். ‘அண்ணன் திருமாவளவனுக்கும் எங்களுக்குமான நட்பு’ இன்று நேற்று அல்ல, கேப்டன் இருந்த காலத்திலிருந்தே மிகப் பெரிய அளவில் சகோதரர்களாகப் பழகியது இந்த உலகத்திற்குத் தெரியுமா இல்லையா என்பது எனக்குத் தெரியாது.
மக்கள் நலக் கூட்டணி இருந்தபோது அவர் எங்களுடைய சகோதரராக இருந்தார். வெளிச்சம் டிவியையும் கேப்டன் தான் தொடங்கி வைத்தார். அப்போது கூட ‘இன்று இருக்கும் அவலத்தை நீதான் வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும்’ என்று கேப்டன் தெரிவித்தார். அந்த அளவிற்கு எங்களுக்கும் நல்ல புரிதல் இருக்கிறது, ஒரு நட்பு இருக்கிறது.
அவரே நேற்று கூட்டத்தில் முதலமைச்சர்தான் ஒவ்வொரு வேட்பாளரையும் அறிமுகப்படுத்த வேண்டும். அதுதான் அரசியல் மாண்பு. நான் எங்கள் இரண்டு வேட்பாளர்கள் பெயரை மட்டும் சொல்லிவிட்டு மற்றவர்கள் பெயரைச் சொல்லவில்லை என்றால் தவறாகிவிடுமே என்பதால் நான் சொன்னேன். அண்ணியாரைப் பற்றி எனக்குத் தெரியும். அவர் மிக இயல்பாகத்தான் இருந்தார். இதைப் பெரிதுபடுத்துபவர்கள் எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும்தான்” என்று தெரிவித்துள்ளார்.“
அது மட்டுமல்ல, விருத்தாச்சலம் உள்ளிட்ட எங்கள் தொகுதிகளுக்கும் அவர் பிரச்சாரத்திற்குப் போய்க்கொண்டுதான் இருக்கிறார். தேமுதிக மீது சொல்வதற்கு வேறு விமர்சனம் இல்லை என்பதால் இப்படிச் சொல்கிறார்கள். ‘பிடிக்காத மருமகள் கைப்பட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம், மாமியார் உடைத்தால் மண் குடம், மருமகள் உடைத்தால் பொன் குடம்’ என்பது போல, இன்று தேமுதிகவை விமர்சிப்பதற்கு வேறு எந்த விஷயமும் இல்லாததால் இப்படி கை வைப்பது, சிரிப்பது எல்லாம் ஒரு விஷயம் என்று உப்புக்குச் சப்பில்லாத விஷயங்களை மீடியாக்கள் பெரிதுபடுத்துகின்றன” என்று தெரிவித்தார்.
