பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி அரசு ஊழியர்கள் முக்கிய முடிவை எடுத்துள்ளனர். Old pension scheme
அரசு ஊழியர்கள் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சூழலில் 2021 சட்டமன்ற தேர்தலின் போது திமுகவின் தேர்தல் வாக்குறுதி எண் : 309ன் படி, புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த கோரி கடந்த மே 5ம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை, கோவை வலையாறு, ராமநாதபுரம் தனுஷ்கோடி ஆகிய இடங்களில் இருந்து சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினர் சென்னை நோக்கி இருசக்கர வாகன பிரச்சார பேரணியை தொடங்கினர்.
இந்த நிலையில் நேற்று இரவு(மே 10) 7.30 மணியளவில் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் மாநில மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் உயர்மட்ட குழு உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. Old pension scheme
இதற்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜெய ராஜராஜேஸ்வரன் தலைமை தாங்கினார்.
இந்த கூட்டத்தில் சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
அதன்படி வரும் மே 14ஆம் தேதி இரவு, இந்த இருசக்கர வாகன பிரச்சார பேரணியைச் சேர்ந்த மூன்று குழுக்களும் செங்கல்பட்டில் சந்தித்து, மே 15ஆம் தேதி மேல்மருவத்தூரில் இருந்து சென்னை நோக்கி பிரச்சாரத்தை தொடங்க முடிவெடுத்துள்ளனர்.
அதைத்தொடர்ந்து வரும் மே 16ஆம் தேதி காலை 10 மணி அளவில் சென்னை நந்தனம் கருவூலத்துறை ஆணையர் அலுவலகத்தில் துவங்கி சென்னை தலைமைச் செயலகம் செல்வது என்று முடிவு செய்துள்ளனர்.
இந்தப் பிரச்சாரத்தின் போது குறிப்பாக, ஓய்வூதிய திட்டம் தொடர்பாக அமைக்கப்பட்ட அலுவலர் குழுவையும் திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தவுள்ளனர்.
பணிக்கொடை, குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை மனுவாக முதலமைச்சரிடம் அளிப்பது என்றும் திட்டமிட்டுள்ளனர்.
இந்த இரு சக்கர வாகன பிரச்சாரத்தின் கடைசி நாளன்று ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் 5 ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்பது என்றும் திட்டமிடப்பட்டுள்ளது. Old pension scheme