சட்டசபை தேர்தலில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிடும் முடிவை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் (Thirumavalavan) திரும்பப் பெறுகிறார். இதற்கான அறிவிப்பு சற்று நேரத்தில் வெளியாக உள்ளது.
திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் ஒன்றான கட்டுமன்னார்கோவில் தொகுதியில் தாம் போட்டியிடுவதாக திருமாவளவன் அறிவித்தார்.
சிதம்பரம் மக்களவை தொகுதி எம்.பி.யாக உள்ள திருமாவளவன், மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிடும் முடிவு விவாதப் பொருளானது.
முதல்வர் ஸ்டாலின் மற்றும் திமுக கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் , திருமாவளவனை தொடர்பு கொண்டு இம் முடிவை திரும்பப் பெற வலியுறுத்தி இருந்தனர்.
இதனிடையே கடந்த திங்கள்கிழமையன்று விசிகவின் உயர்நிலைக் கூட்டம் நடைபெற்றது. 40 பேர் பங்கேற்ற இந்த உயர்நிலைக் கூட்டம் விடிய விடிய நடைபெற்றது. இதில் தாம் ஏன் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிடுகிறேன் என்பதை திருமா விவரித்திருந்தார். மேலும் விசிக நிர்வாகிகள் 90%-க்கும் அதிகமானோர், காட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டியிடும் முடிவை ஆதரித்தனர். இதனையடுத்து காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிடுவதில் திருமாவளவன் உறுதியாக இருந்தார். இது திமுக கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தது என டிஜிட்டல் திண்ணையில் பதிவு செய்திருந்தோம்.
இந்நிலையில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் அத்தொகுதிக்கான பொறுப்பு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் இன்று வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் நடைபெற இருந்தது. ஆனால் திடீரென இந்த நிகழ்ச்சி இன்று ரத்து செய்யப்பட்டது.
திருமா முடிவில் மாற்றம்
இது தொடர்பாக நாம் விசாரித்த போது, “ காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிடும் முடிவை திருமாவளவன் திரும்பப் பெற வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தினர். இதனை ஏற்று காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிடும் முடிவை திருமாவளவன் திரும்பப் பெறுகிறார்.
யார் புதிய வேட்பாளர்?
திருமாவளவனுக்கு பதில் நெய்வேலியைச் சேர்ந்த ராமசாமி என்ற இளங்குமரன் காட்டுமன்னார்கோவில் தொகுதி விசிக வேட்பாளராக போட்டியிட உள்ளார். இவர் என்.எல்.சியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்” என்றனர்.
சற்று நேரத்தில் அறிவிப்பு
காட்டுமன்னார்கோவில் தொகுதியில் தாம் போட்டியிடவில்லை என்ற முடிவை இன்னும் சற்று நேரத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் திருமாவளவன் அறிவிக்க உள்ளார்.
