இன்றைய இளைஞர்கள், குறிப்பாக மாணவர்கள் இந்த நான்கு விஷயங்களை மனதில் வைத்து செயல்பட்டால் நிச்சயம் வெற்றி பெறலாம் என்று முகேஷ் அம்பானி கூறியுள்ளார்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி இன்றைய இளைஞர்களுக்கு சில முக்கியமான அறிவுரைகளை வழங்கியுள்ளார். எதிர்காலத்தை வடிவமைக்கும் தொழில்நுட்பங்கள் மற்றும் தொழில்களில் தன்னிறைவு அடைவது இன்றைய காலகட்டத்தில் மிகவும் அவசியம் என்று கூறியுள்ளார். தீன்தயாள் எனர்ஜி பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பேசிய அவர், இளைஞர்கள் இந்தியாவின் புதிய மற்றும் தன்னிறைவான தலைமுறையினர் என்றும், அவர்கள் இந்தியாவை வளமான மற்றும் பிரகாசமான நாடாக மாற்ற உதவுவார்கள் என்றும் கூறினார்.
2007 முதல் இந்தப் பல்கலைக்கழகத்தின் தலைவராக இருக்கும் தனக்கு, இந்தப் பல்கலைக்கழகம் ஒரு புனிதமான ஆலயம் போன்றது என்றும், இது இந்தியா மட்டுமல்ல, ஒட்டுமொத்த பூமிக்கும் நலன் பயக்கும் அறிவை அளித்து வருகிறது என்றும் அவர் தெரிவித்தார். பல்கலைக்கழகத்தின் பெருமைக்குரிய சாதனைகளையும் அம்பானி பட்டியலிட்டார். NIRF 2025 தரவரிசையில் புதுமைப் பிரிவில் முதல் 50 இடங்களில் இந்தப் பல்கலைக்கழகம் இடம் பிடித்துள்ளது. மேலும், இங்குள்ள பல பேராசிரியர்கள் ஸ்டான்போர்ட் குளோபல் பட்டியலில் உலகின் சிறந்த விஞ்ஞானிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் முகேஷ் அம்பானி பேசுகையில், “பண்டிட் தீதயாள் எனர்ஜி பல்கலைக்கழகம், பிரதமர் நரேந்திர மோடியின் உத்வேகம் அளிக்கும் தொலைநோக்குப் பார்வையுடன் நிறுவப்பட்டது. எரிசக்தித் துறையில் இந்தியாவை உலகளாவிய தலைவராக உருவாக்குவதே அவரது கனவாக இருந்தது. இன்று, இந்தியா ஒரு வரலாற்றுத் திருப்புமுனையில் நிற்கிறது. உலகப் பொருளாதாரம் 2.5% வளர்ந்து வரும் நிலையில், இந்தியா 8% என்ற வேகத்தில் வேகமாக வளர்ந்து வருகிறது. எதிர்காலத்தை வடிவமைக்கும் தொழில்நுட்பங்கள் மற்றும் தொழில்களில் நாம் தன்னிறைவு அடைய வேண்டியது மிகவும் அவசியம்.
பசுமை ஆற்றல், பசுமைப் பொருட்கள் மற்றும் பசுமைப் பொருளாதாரம் போன்ற துறைகளில் பண்டிட் தீன்தயாள் எனர்ஜி பல்கலைக்கழகம் உலகளாவிய தலைவராக மாற வேண்டும் என்பதே எங்கள் விருப்பமாகும். ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் கடந்த 10 ஆண்டுகளில் பண்டிட் தீன்தயாள் எனர்ஜி பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்கு ரூ.150 கோடி நிதியுதவி செய்துள்ளதுடன், இந்த ஆதரவு எதிர்காலத்திலும் தொடரும்” என்று கூறினார். மேலும், முகேஷ் அம்பானி பட்டமளிப்பு விழாவில் மாணவர்களிடம் பேசுகையில், நீங்கள் இந்த புதிய உலகிற்குள் நுழையும்போது, நான்கு வாழ்நாள் தோழர்களை உங்களுக்கு அறிமுகப்படுத்த விரும்புகிறேன் என்றார்.
மாணவர்களின் வளர்ச்சிக்கு முகேஷ் அம்பானி நான்கு முக்கிய குணங்களை உதாரணமாகக் கூறினார். ஆர்வம், தைரியம், விடாமுயற்சி மற்றும் நன்றியுணர்வு. இந்த குணங்கள் அவர்களை வாழ்வில் வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும். ஆர்வம் புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுக்கும். தைரியம் பெரிய கனவுகளைக் காணவும், தடைகளைத் தாண்டிச் செல்லவும் உதவும். விடாமுயற்சி தோல்விகளில் இருந்து மீண்டு வரவும், வெற்றியை அடையவும் அவசியம். நன்றியுணர்வு மற்றவர்களின் பங்களிப்பை மதிக்கவும், பணிவாக இருக்கவும் கற்றுக்கொடுக்கும். இந்த நான்கு குணங்களும் மாணவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு ஒரு வலுவான அடித்தளமாக அமையும்.
