மதிப்பீட்டு ஆண்டு 2026-27க்கான வருமான வரி கணக்குகளை (ITR) வரிசெலுத்துவோர் சீரான வேகத்தில் தாக்கல் (ITR Filing) செய்யத் தொடங்கியுள்ளனர். கணக்கு தணிக்கை (Non-audit) செய்யத் தேவையில்லாத வரிசெலுத்துவோருக்கான கடைசி தேதியை அரசாங்கம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனாலும், கடந்த ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் ஜூலை 31ஆம் தேதியே வழக்கமான காலக்கெடுவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
1.52 கோடிக்கும் அதிகமான கணக்குகள் தாக்கல்:
வருமான வரித்துறையின் மின்-தாக்கல் (e-filing) இணையதளத் தரவுகளின்படி, ஜூலை 8ஆம் தேதி வரை 1.60 கோடி வரி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 1.52 கோடிக்கும் அதிகமானவை ஏற்கனவே சரிபார்க்கப்பட்டு (Verified) விட்டன. அதாவது, தாக்கல் செய்யப்பட்ட ஐடிஆர்களில் (ITR) கிட்டத்தட்ட 95% கணக்குகள் கட்டாய சரிபார்ப்பு செயல்முறையை நிறைவு செய்துள்ளன. உங்கள் ஐடிஆரை தாக்கல் செய்வது மட்டுமே இறுதி கட்டம் அல்ல; அது மின்-சரிபார்ப்பு (e-verification) செய்யப்பட்டால் மட்டுமே முழுமையடையும். இந்த சரிபார்ப்பை ஆதார் ஓடிபி (Aadhaar OTP), நெட் பேங்கிங், வங்கி கணக்கு, டிமேட் கணக்கு ஆகியவற்றின் மூலம் மின்னணு முறையிலோ அல்லது கையொப்பமிடப்பட்ட ITR-V படிவத்தை பெங்களூருவில் உள்ள மத்திய செயலாக்க மையத்திற்கு (CPC) அஞ்சல் மூலம் அனுப்புவதன் மூலமோ மேற்கொள்ளலாம்.
வேகமான வரித் தாக்கல்:
வருமான வரித்துறையின் மின்-தாக்கல் போர்ட்டலில் தற்போது 13,94,27,313 தனிநபர் பயனர்கள் பதிவு செய்துள்ளனர். இது இந்த டிஜிட்டல் தளத்தை மக்கள் பயன்படுத்துவது தொடர்ந்து அதிகரித்து வருவதைக் காட்டுகிறது. மதிப்பீட்டு ஆண்டு 2025-26இல் தாக்கல் செய்யப்பட்ட 8.5 கோடிக்கும் அதிகமான ஐடிஆர்களுடன் ஒப்பிடும்போது, தற்போதைய வரி தாக்கல் சீசன் இன்னும் ஆரம்ப கட்டத்திலேயே உள்ளது. இருப்பினும், மின்-சரிபார்ப்பு செய்யப்பட்ட கணக்குகளின் எண்ணிக்கையை பார்க்கும்போது, இந்த ஆண்டும் வரி தாக்கல் செய்யும் வேகம் வலுவாகவே உள்ளது.
