பிரதமர் மோடி பங்கேற்கும் மதுராந்தகம் கூட்டத்தில் பாமகவின் ‘மாம்பழம்’ சின்னம் இடம் பெற்றுள்ளதற்கு அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக் கூட்டத்தில் மோடி பங்கேற்கிறார். இக்கூட்டத்தில் பாமகவின் ஒரு பிரிவின் தலைவர் அன்புமணி பங்கேற்கிறார். மேலும் இக்கூட்டத்தின் பேனரில் பாமகவின் மாம்பழம் சின்னம் இடம் பெற்றுள்ளது.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள டாக்டர் ராமதாஸ், “எங்களின் அனுமதி பெறாமல் மாம்பழம் சின்னத்தை மோடியின் கூட்டத்தில் பயன்படுத்தியிருப்பது சட்டவிரோதம்; அதிகார துஷ்பிரயோகம். தமிழக மக்களை ஏமாற்றும் செயல்.
மாம்பழம் சின்னம், பாமக தொண்டர்களின் அடையாளம். அது யாருக்குமே ஒதுக்கப்படவில்லை. அதை ஒரு குறிப்பிட்ட அணி தனக்கு உரியது என காட்டிக் கொள்வது ஏமாற்று வேலை.
அரசியல் அறமற்ற இந்த செயலை தமிழ்நாடு மக்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள். இது தொடர்பாக தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
