டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்கு நீர் தேவை அதிகரித்துள்ளதை அடுத்து மேட்டூர் அணையின் நீர் திறப்பு விநாடிக்கு 11,000 கன அடியில் இருந்து 13,000 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக இந்த ஆண்டு மேட்டூர் அணை ஜூன் 12-ல் திறக்கப்பட்டது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்கள் முழுமையாகவும், திருச்சி, கடலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் பகுதியாகவும் காவிரி டெல்டா பகுதி அமைந்துள்ளது.
இந்த மாவட்டங்களில் காவிரி நீரைக் கொண்டும், வடிமுனைக் குழாய் மூலமாகவும் குறுவை, சம்பா, தாளடி ஆகிய பருவங்களில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.
தற்போது ரூ.80 கோடி மதிப்பில் டெல்டா மாவட்டங்களில் ஆறுகள், வாய்க்கால்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் தூர்வாரப்பட்டுள்ளதால் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரும் கடைமடை வரையில் விரைவாக சென்று சேரும் வாய்ப்புள்ளது என்பதால், இந்த ஆண்டு 4 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடைபெற வாய்ப்புள்ளது என வேளாண்மைத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் டெல்டா மாவட்டங்களில் பாசனத்துக்கான நீர் தேவை அதிகரித்துள்ளதால், மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்குத் திறக்கப்பட்டு வரும் நீரின் அளவு விநாடிக்கு 11,000 கன அடியில் இருந்து 13,000 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் நேற்று முன்தினம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 94.10 அடியாக இருந்த நிலையில் நேற்று 93.32 அடியாக குறைந்துள்ளது.
ராஜ்
கொள்முதல் விலைக்கே தக்காளி: தமிழக அரசு திட்டம்!