2026-ம் ஆண்டின் முதலாவது சந்திர கிரகணம் இன்று மார்ச் 3-ந் தேதி பிற்பகல் நிகழ்கிறது
நடப்பாண்டின் முதல் சந்திர கிரகணம், இன்று பிற்பகல் 3.20 மணிக்கு தொடங்கி மாலை 6.48 மணிக்கு முடிவடையும். இந்நிகழ்வின் போது நிலவு முழுமையாக சிவப்பு நிறமாக தெரியும். நிலா ரத்த நிறத்தில் மாறுவதை மாலை 4.34 மணி முதல் மாலை 5.33 மணி வரை காணலாம்.
அருணாச்சலப் பிரதேசம், அசாம் உள்ளிட்ட வட கிழக்கு பகுதிகளில் சந்திர கிரகணத்தின் காட்சி முழுமையாக தெரியும்.
சென்னையில் வசிப்பவர்கள் இந்த முழு சந்திர கிரகணத்தின் இறுதிப் பகுதியை சுமார் 31 நிமிடங்கள் வரை காண முடியும். இன்று மாலை 6:17 மணிக்கு சந்திரன் உதயமாகி, மாலை 6:48 மணிக்கு கிரகணத்தின் உம்பரல் நிழல் நீங்கும் வரை, இந்த அற்புத காட்சியை கண்டு ரசிக்கலாம். கன்னியாகுமரி உள்ளிட்ட தென் தமிழகப் பகுதிகளிலும் இதே அளவு நேரம் வரை கிரகணத்தின் இறுதிப் பகுதியைக் காண வாய்ப்புள்ளது. வடகிழக்கு இந்தியா மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகளில் முழு கிரகணத்தின் இறுதி கட்டத்தை தெளிவாகக் காண முடியும்.
- பகுதி கிரகணம் தொடக்கம் பிற்பகல் 3:20
- முழு கிரகணம் தொடக்கம் மாலை 4:34
- அதிகபட்ச கிரகணம் மாலை 5:04
- முழு கிரகணம் முடிவு மாலை 5:33
- முழுமையாக முடிவடைவது இரவு 7:53
சூரிய கிரகணத்தைப் போலல்லாமல், சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பாதுகாப்பாகப் பார்க்கலாம் என தமிழ்நாடு அறிவியல் இயக்கம் உறுதி செய்துள்ளது.
கிரகணத்தையொட்டி, தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் உள்ள பல முக்கிய கோயில்களின் நடை சாத்தப்பட்டுள்ளன.
இன்று காலை 6:20 மணி முதல் கிரகணம் முடியும் வரை “சூதக் காலம்” நிலவுகிறது; கர்ப்பிணிப் பெண்கள் வெளியில் வருவதைத் தவிர்ப்பது, இஷ்ட தெய்வ மந்திரங்களைச் சொல்வது நல்லது என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
