இன்று (டிசம்பர் 3) கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு அனைத்து வீடுகளிலும் தீபம் ஏற்றப்படும்.
ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் பவுர்ணமி சமயத்தில் கார்த்திகை தீப விழா கொண்டாடப்படுகிறது. பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னிக்கு உரிதான கோயிலாக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் விளங்கிறது. சிவன் அக்னி பிழம்பாக, நெருப்பு மலையாக நின்றார் என்ற ஐதிகத்தின்படி, 2,668 அடி உயரம் கொண்ட அண்ணாமலை மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும்.
அந்தவகையில் இன்று திருவண்ணாமலையில் தீபம் ஏற்றப்படுகிறது. முன்னதாக இன்று அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
இன்று மாலை 6 மணிக்கு பஞ்சமூர்த்திகள் – தங்க விமானங்களில் எழுந்தருளி, அர்த்தநாரீஸ்வரர் காட்சிதர, ஸ்வரூப் மகா தீபம் மலையில் ஏற்றுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
இதையொட்டி திருவண்ணாமலையில் திரும்பும் திசையெங்கும் மக்கள் கூட்டம் காணப்படுகிறது. சுமார் 10 லட்சம் பேர் வருகை தந்திருப்பதாக தகவல்கள் வருகின்றன. அங்கு மலை பெய்து வருவதால் கையில் குடையை வைத்துக்கொண்டு மக்கள் கிரிவலப்பாதையை சுற்றி வருகின்றனர்.
சரி, வீடுகளில் எப்போது தீபம் ஏற்றலாம்?
இன்று கிருத்திகை நட்சத்திரம் மாலை 4.48 மணி முதல் நாளை -டிசம்பர் 4 மாலை 3.08 மணி வரை இருக்கிறது. பெளர்ணமி திதி நாளை காலை 7.55 மணிக்கு தொடங்குகிறது.
தீபம் ஏற்றும் போது கார்த்திகை நட்சத்திரம் இருக்க வேண்டும். அதனால் இன்று மாலை 6 மணிக்கு மேல் தீபம் ஏற்றலாம்.
எந்த திசையில் ஏற்றலாம்?
பூஜை அறையில் விளக்கு ஏற்றிய பிறகு மற்ற இடங்களில் வைக்க வேண்டும். கிழக்கு திசை நோக்கி ஏற்றுவது துன்பங்களை நீக்கும். வடக்கு திசை நோக்கி ஏற்றுவது அறிவையும் செல்வத்தையும் வளர்க்கும். மேற்கு திசை நோக்கி ஏற்றுவது கடன் தொல்லைகளையும் தோஷங்களையும் போக்கும். தெற்கு திசை நோக்கி தீபங்கள் ஏற்றக்கூடாது என ஆன்மீக ரீதியாக சொல்லப்படுகிறது.
எத்தனை தீபம் ஏற்ற வேண்டும்?
27 நட்சத்திரங்களை குறிக்கும் வகையில் 27 அகல் விளக்குகளைஏற்றலாம். சமையலறை, மொட்டை மாடி, பால்கனி, மாடி படிகட்டு, கழிவறை, கிணறு, அம்மிக்கல், குப்பைகள் குவிக்கப்படும் இடம் என எல்லா இடங்களிலும் தீபம் ஏற்றலாம்.
