மநீம தலைவர் கமல்ஹாசன் பிரதமர் மோடியை சந்தித்து பேசியுள்ளார்.
திமுக கூட்டணியில் மாநிலங்களவை எம்.பி.யாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜூலை 25ஆம் தேதி எம்.பி.யாக பொறுப்பேற்ற கமல்ஹாசன், மாநிலங்களவை அலுவல்களில் கலந்துகொண்டு வருகிறார்.
இந்தநிலையில் பிரதமரைச் சந்திக்க நேரம் கேட்டிருந்தார் கமல்ஹாசன். அதன்படி இன்று (ஆகஸ்ட் 7) நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இன்று பிரதமரைச் சந்தித்தபோது, கீழடி அகழ்வாராய்ச்சி மாதிரியை பரிசாக வழங்கினார் கமல். கீழடி தொடர்பான கோரிக்கை மனுவையும் அளித்துள்ளார். தொடர்ந்து இருவரும் பரஸ்பர நலம் விசாரித்துக்கொண்டனர்.
இந்த சந்திப்பு தொடர்பாக கமல் தனது எக்ஸ் பக்கத்தில், “இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை மரியாதை நிமித்தமாக இன்று சந்தித்தேன். ஒரு கலைஞனாகவும் தமிழ்நாட்டின் பிரதிநிதியாகவும் அவரிடம் சில கோரிக்கைகளைத் தெரிவித்திருக்கிறேன். அவற்றுள் தலையாயது கீழடி. தமிழின் தொன்மையை, தமிழ் நாகரிகத்தின் பெருமையை உலகிற்கு உரக்கச் சொல்லும் தமிழர்களின் முன்னெடுப்புகளுக்கு பிரதமர் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்” என்று பதிவிட்டுள்ளார்.
கீழடி அகழ்வாராய்ச்சி அறிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை. இதுதொடர்பாக நாடாளுமன்றத்திலும் திமுக எம்.பி.க்கள் குரல் கொடுத்து வருகின்றனர். தமிழ்நாட்டில் இருந்துதான் இந்தியாவின் வரலாறு எழுதப்பட வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இந்தநிலையில் கீழடி குறித்த கோரிக்கையுடன் கமல் பிரதமரை சந்தித்திருப்பது தமிழக மக்களின் கவனத்தை பெற்றுள்ளது.
