மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகை இன்று (ஏப்ரல் 9) அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்தார். அவர் வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய விருதாம்பிகை, “திமுக ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி, அனைத்து சமூக மக்களுக்கும் உரிய பங்களிப்பு கொடுப்போம் என்று திமுக அறிவித்துள்ளது. இந்த ஆண்டு 27 எம்எல்ஏ சீட்கள் வழங்கப்பட்டுள்ளன” என்று சுட்டிக்காட்டினார்.
மேலும், “ஜாதி வாரி கணக்கெடுப்பு எடுப்போம் என்று அறிவிக்காத கட்சியுடன் அன்புமணி கூட்டணி வைத்துள்ளார். இந்த முறை கிராமம் கிராமமாகச் சென்று பிரச்சாரம் செய்து, கண்டிப்பாக அன்புமணியைத் தோற்கடிப்பதே எங்கள் முதல் நோக்கமாக இருக்கும். அதேபோல் எடப்பாடியை டெபாசிட் காலியாக வைப்போம்” என்றார்.
அப்போது, காடுவெட்டி குருவின் மகன் விருதாச்சலம், ஜெயங்கொண்டம் ஆகிய தொகுதிகளில் பாமக துண்டுடன் பிரச்சாரம் செய்வது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு,“பாமகவில் இருந்து எங்களுக்கும் அழைப்பு வந்தது. எனது தந்தையை அவர்கள் கொன்றார்கள். 48 நாட்கள் அந்த மருத்துவமனையில் இருந்தது எனது தம்பி கனல் இல்லை. நாங்கள்தான் இருந்தோம். அங்கு எவ்வளவு கொடுமை நடந்தது என்பதை கண்கூடாகப் பார்த்தோம். ஒரு முறை எனது அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்தபோது, ‘அடுத்த முறை ஹார்ட் அட்டாக் வந்தால் விட்டு விடுங்கள். அடுத்த முறை செலவு செய்ய வேண்டாம்’ என்று சொன்னார். அவருடைய மகள், மனைவி உள்ளிட்ட குடும்பத்தினருக்கு இதுபோல் ஒரு பிரச்சனை வந்தால் அவர்கள் விட்டு விடுவார்களா? கனல் சென்றது அவருடைய விருப்பம். நாங்கள் போகவில்லை” என்று தெரிவித்தார்.
