டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்து அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட நீதிபதி யஷ்வந்த் வர்மா தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக, டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்புப் படையினர் சென்று தீயை அணைத்தபோது, வீட்டின் ஒரு அறையில் பாதி எரிந்த நிலையில் மூட்டை மூட்டையாக 500 ரூபாய் நோட்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இது குறித்த செய்திகள் வெளியாகி நாடு முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. நீதிபதியின் வீட்டில் பணம் சிக்கிய விவகாரம் குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒரு குழுவை அமைத்தது. குழுவின் விசாரணையில் பணம் இருந்தது உறுதியானது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, டெல்லியில் இருந்து யஷ்வந்த் வர்மா அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். இதற்கிடையில், நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி 146 எம்பிக்கள் கையெழுத்திட்ட தீர்மானம் மக்களவையில் கொண்டுவரப்பட்டது.
இது குறித்த விசாரணை தற்போது மக்களவைச் செயலகத்தில் நடைபெற்று வருகிறது.இந்நிலையில், நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமாவை சமர்ப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது ராஜினாமா கடிதம் குறித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விரைவில் முடிவெடுப்பார் என கூறப்படுகிறது.
