தமிழகத்தின் நாகப்பட்டிணம், ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் வங்கக் கடலில் மீன்பிடிக்க செல்லும்போது, எல்லை தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி அவர்களை கைது செய்வதும், பிறகு விடுவிப்பதும் தொடர்கதையாகியுள்ள நிலையில், நேற்று கன்னியாகுமரி மீனவர்கள் 8 பேரை இந்தோனேசிய கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
ஆழ்கடல்வரை சென்று மீன்பிடிப்பதை வழக்கமாக கொண்டுள்ள கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள், கேரளாவின் கொச்சி துறைமுகத்தையும், மகாராஷ்டிரா, அந்தமான் உள்ளிட்ட துறைமுகங்களையும் தங்கு தளமாக கொண்டு மீன் பிடித்து வருகின்றனர். இவர்கள் ஒருமுறை கடலுக்குள் மீன்பிடிக்க சென்றால் சுமார் 30 முதல் 60 நாட்கள் வரை ஆழ்கடலில் தங்கி இருந்து மீன்பிடித்துவிட்டு திரும்புவார்கள். இவர்கள் 400 முதல் 600 கடல் மைல் தொலைவு வரை சர்வ சாதாரணமாக செல்வார்கள்.
இந்த நிலையில், குமரி மாவட்டம் தூத்தூர் மீனவ கிராமத்தைச் சேர்ந்த எட்டு மீனவர்கள் படகு மூலம், அந்தமானில் இருந்து ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். இவர்கள் நேற்று ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இந்தோனேசிய கடற்படையினர் எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, எட்டு பேரையும் கைது செய்தனர்.
கைது செய்த 8 மீனவர்களையும் இந்தோனேசியா துறைமுகப்பகுதிக்கு அழைத்து சென்று எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றத்திற்காக வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்து உள்ளதாக கூறப்படுகிறது.
இந்தோனேசிய கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள குமரி மீனவர்களை அரசு மீட்டு தர வேண்டும் என்று அவர்களது உறவினர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
**-வினிதா**
